/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெரினா லுாப் சாலையை ஆக்கிரமித்த கடைகள் அகற்றம்
/
மெரினா லுாப் சாலையை ஆக்கிரமித்த கடைகள் அகற்றம்
ADDED : நவ 08, 2024 12:12 AM

சென்னை, மெரினா லுாப் சாலையை ஆக்கிரமித்து, நுாற்றுக்கணக்கான மீன் கடைகள் அமைக்கப்பட்டுஉள்ளன. இங்கு, அன்றாடம் பிடித்து வரப்படும் மீன் வகைகள், நண்டு உள்ளிட்டவை கிடைப்பதால், விடுமுறை நாட்கள் மட்டுமின்றி, மற்ற நாட்களிலும் அசைவ பிரியர்கள் அதிகம் வருகின்றனர்.
அவ்வாறு வருவோர் சாலையை ஆக்கிரமித்து, தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால், லுாப் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு தீர்வு காணும் விதமாக, லுாப் சாலையிலேயே நவீன மீன் அங்காடி கட்டப்பட்டது. கடைகள் குலுக்கல் முறையில் வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டன.
ஆனால், சில வியாபாரிகள் முன் வரிசையில் தான் கடைகள் வேண்டும்; இல்லையென்றால் நாங்கள் வழக்கம் போல சாலையிலேயே, தங்கள் விற்பனையை தொடர்வோம் என்று அடம்பிடித்தனர். மீன் அங்காடிக்கு வராமல் தொடர்ந்து சாலையிலேயே மீன் விற்பனையை செய்து வந்தனர்.
மாநகராட்சி அதிகாரிகள் பல முறை எச்சரித்தும், சாலையோர வியாபாரிகள் புதிய மீன் அங்காடிக்கு மாற முன் வரவில்லை.
இந்நிலையில், நேற்று காலை, தேனாம்பேட்டை மண்டல பொறியாளர் கார்த்திக் தலைமையிலான மாநகராட்சி ஊழியர்கள், நொச்சிநகர் முதல் டும்மிங்குப்பம் வரையிலான லுாப் சாலையில், ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த மீன் கடைகளை அதிரடியாக அகற்றினர்.

