/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சமூக நலக்கூட கட்டுமான பணி துவக்கம்
/
சமூக நலக்கூட கட்டுமான பணி துவக்கம்
ADDED : பிப் 09, 2024 12:41 AM

சைதாப்பேட்டை, சைதாப்பேட்டையில் நான்கு ஆண்டுகளுக்கு முன், எம்.எல்.ஏ., நிதியில் துவக்கப்பட்டு, நீதிமன்ற வழக்கால் தடைபட்ட சமூக நலக்கூடம் கட்டும் பணி, மீண்டும் துவக்கப்பட்டு உள்ளது.
கோடம்பாக்கம் மண்டலம், சைதாப்பேட்டை 142வது வார்டில் வி.வி., கோவில் தெரு உள்ளது. இத்தெருவில், நெடுஞ்சாலை துறை அலுவலகம், ரேஷன் கடை குடிநீர் வாரிய அலுவலகம், காந்தி மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன.
இப்பகுதியில் காலியாக இருந்த இடத்தில், சிலர் பழக்கடை நடத்தி வந்தனர். இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு முன் அப்போது எம்.எல்.ஏ., வாகவும், தற்போது மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சராகவும் உள்ள சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., நிதியில், 1.35 கோடி ரூபாய் செலவில், சமூக நலக்கூடம் அமைக்க திட்டமிடப்பட்டு, பணிகள் துவக்கப்பட்டன.
அப்போது, அங்கு வியாபாரம் செய்த வியாபாரிகள் சிலர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கால், சமூக நலக்கூடம் கட்டும் பணி தடைபட்டது. நான்கு ஆண்டுகளுக்குப் பின், அது மாநகராட்சி இடம் என, தீர்ப்பு வந்துள்ளது.
இதையடுத்து, பாதியில் நிறுத்தப்பட்ட சமூக நலக்கூடம் அமைக்கும் பணிகளை, மாநகராட்சி அதிகாரிகள் மீண்டும் துவக்கியுள்ளனர்.
தற்போது, மூல பொருட்கள் விலை உயர்வை அடுத்து, 1.35 கோடி ரூபாய் செலவில் நான்கு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட இருந்த சமூக நலக்கூடம், தற்போது, 2.40 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ளது.
மீதமுள்ள நிதியும், தற்போது எம்.எல்.ஏ., நிதியில் இருந்து வழங்கப்பட உள்ளது. புதிய சமூக நலக்கூட கட்டடத்தில், கீழ் தளத்தில் வாகன நிறுத்தம், முதல் மற்றும் இரண்டாவது தளத்தில் ஹால் அமைய உள்ளன.
இப்பகுதியை நேற்று, கோடம்பாக்கம் மண்டல செயற்பொறியாளர் இனியன், மண்டல குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இந்த சமூக நலக்கூடம் பயன்பாட்டிற்கு வரும் போது, இப்பகுதியைச் சுற்றியுள்ள, 13 குடிசை பகுதி மக்கள் பயனடைவர் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

