ADDED : செப் 20, 2024 12:24 AM

எண்ணுார், எண்ணுார் பகுதியில் கடலில் குளித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டையைச் சேர்ந்தவர் ஹரிஷ், 17, பாலிடெக்னிக் மாணவர். இவருடன், அதே பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ், 17, உள்ளிட்ட ஐந்து பேர், நேற்று மதியம் மின்சார ரயிலில் எண்ணுாருக்கு வந்துள்ளனர்.
எண்ணுார், சின்னகுப்பம் கடற்கரையில் இவர்கள் குளித்துக் கொண்டிருந்த போது, திடீரென தோன்றிய ராட்சத அலையில், ஹரிஷ் சிக்கினார். அவரை காப்பாற்ற மோகன் ராஜ் முயன்றார். ஆனால், மோகன் ராஜையும் கடல் அலை இழுத்து சென்றது.
அவரை அப்பகுதி மீனவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடலில் மாயமான ஹரிஷை, அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் உதவியுடன், எண்ணுார் தீயணைப்பு துறையினர் தேடினர். சிறிது நேரத்தில், ஹரிஷ் உயிரிழந்த நிலையில், அவரது உடலை மீட்டனர்.