கொளத்துார், சென்னையில் மழை ஓய்ந்ததை தொடர்ந்து தற்போது லேசான பனி மட்டும் அதிகாலையில் காணப்படுகிறது. இந்நிலையில், கொசுத்தொல்லை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
முன்போல, கொசுஒழிப்பு பணிகளில் மாநகராட்சி தீவிரம் காட்டாததால், கொசுவால் மக்கள் பெரிதும் பாதித்து வருகின்றனர். குறிப்பாக கால்வாய் சுற்றியுள்ள பகுதியில், குப்பை மற்றும் கழிவு தேங்கிய பகுதிகளை சுற்றியுள்ள இடங்களில் கொசு பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.
கொளத்துார், பெரம்பூர், ஓட்டேரி போன்ற பகுதியில் மாலை 6:00 மணிக்கு மேல் கொசுவின் தாக்கம் அதிகமாக உள்ளதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது:
சென்னையில் மட்டுமே கொசு ஒழிப்பு பணிக்கு ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்படுகின்றனர். பெரும்பாலான வார்டுகளில் கொசு ஒழிப்பு பணிக்கு ஆட்களை நியமித்துள்ளதாக கணக்கு மட்டும் காட்டிவிட்டு பணிகளை செய்வதில்லை.
கழிவுநீர் தேக்கத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதில்லை. வீடுவீடாக சென்ற கொசு ஒழிப்பு மருந்துகளை தெளிப்பதில்லை. மேயரும், அமைச்சர்களும் மாலை 6:00 மணிக்கு மேல் நகர் வலம் வந்தால் பாதிப்பை உணரலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.