ADDED : டிச 16, 2025 04:48 AM
மா ர்கழி மாதம் பிறக்கும் முன்னரே, சபாக்களில் இசை கச்சேரி களைகட்டி வருகிறது. ஸ்ரீ லாஸ்யா கலாசார அமைப்பு, பார்த்தசாரதி சுவாமி உள்ளிட்ட சபாக்களில் பிரபல குரலிசை மற்றும் வாத்திய கலைஞர்கள் பிரமாதப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், மயிலாப்பூர் நாரத கான சபாவில், குரலிசை கலைஞர் ஸ்வராத்மிகா தன் கச்சேரியை துவக்கினார். மயக்கும் குரலில் 'நீவே நன்னு பரிபாலின்சு' என்ற ஜி.என்.பாலசுப்பிரமணியம் வர்ணத்தை பாடினார். 'நீயே என்னைக் காப்பாய்' என்ற பொருளில் பக்தியில் உருகினார். ரஞ்சனி ராகத்தில், காஞ்சி காமாட்சி அம்மனை போற்றி, சபாவில் ஆட்சி செய்ய அழைத்தார்.
பின், நாட்டை ராகத்தில் 'சக்தி கணபதிம்' என்ற ரூபக தாள கிருதியை எடுத்து முன்வைத்தது மட்டுமல்லாமல், கற்பனை ஸ்வரங்களை 3, 4, 5 என்ற எண்ணிக்கையில் ஸ்வர கோர்வையாக கோர்த்தார். சபையில் இருந்தோரின் மனங்களை தன் லயத்தால் இழுத்து கட்டினார்.
ஆலாபனையில் துவங்கப்பட்ட 'அந்தரங்க பக்தி' எனும் சத்விதமார்கினி ராக கிருதி, கற்பனை ஸ்வரங்கள் மற்றும் கோட்டீஸ்வர அய்யரின் முத்திரையோடு சபையி ல் விடுவித்தார்.
தொடர்ந்து, குந்தளவராளி ராகத்தில் தியாகராஜரின், 'சென்தனேசதா' கிருதியை கச்சிதமான சிட்டை ஸ்வரங்களுடன் இணைத்தார்.
ஆழ்ந்த பக்தி மற்றும் தீவிர உணர்வுகளை வெளிப்படுத்தும் பூர்விகல்யாணி ராகத்தில், கச்சேரியின் முக்கிய கிருதியாக கொடுக்க நினைத்த ஸ்வராத்மிகா, ஆலாபனையில் துவங்கினார். அப்போது, வயலின் இசை மூ லம் பல ஸ்வர பிரயோகங்களை இசைத்து, தன் மீதும் ரசிகர்களை கவனிக்க வைத்தார் சி.எஸ்.சின்மயி.
'மெரசித்திவேமு' என்ற துவிகளை ஆதிதாள கிருதியை, நிரவல், கற்பனை ஸ்வரங்கள், ஸ்வர கோர்வைகளுடன் இவர் தொடுக்க, சபையினரின் கைகளில் தாளம், நடனம் போடும் அளவிற்கு, தனி ஆவர் த்தனத்தை சிறப்பாக வழங்கினார் திருச்சேறை கவுசிக் ராஜகோபாலன்.'கல்யாண கோபாலம்' எனும் நாராயண தீர்த்தரின் தரங்கத்தை சிந்துபைரவி ராகத்தில், கண்டசாபு தாளத்தில் இசைத்தனர். இறுதியாக லால்குடி ஜெயராமனின் தேஷ் தில்லானா பாடி, கச்சேரியை நிறைவு செய்தனர்.
- ரா.பிரியங்கா

