/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டி.பி.ஐ., வளாகத்தில் ஆசிரியர்கள் முற்றுகை
/
டி.பி.ஐ., வளாகத்தில் ஆசிரியர்கள் முற்றுகை
ADDED : அக் 05, 2024 06:36 AM

சென்னை: ஆசிரியர் நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற, 200க்கும் மேற்பட்டவர்கள், பள்ளி கல்வி அலுவலகங்கள் உள்ள, டி.பி.ஐ., வளாகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
தமிழகத்தில், ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆசிரியர் தேர்வாணையம் சார்பில், பி.டி., -- பி.ஆர்.டி.இ., தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 12 ஆண்டுகளுக்கு பின், கடந்த ஆண்டு 3,192 காலி பணியிடங்களுக்காக இந்த தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றோருக்கு, கடந்த ஜூன் மாதம் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. அடுத்த கட்டமாக நடக்க வேண்டிய கலந்தாய்வு, பணி நியமனங்கள் இதுவரை நடக்கவில்லை.
இதுவரை, தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பலரும், தனித்தனியாக பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளை சந்தித்து, இதை வலியுறுத்தி வந்தனர்.
அதற்கு பலனில்லாத நிலையில், நேற்று காலை, 200க்கும் மேற்பட்டோர், சென்னை டி.பி.ஐ., வளாகம் முன் குவிந்தனர்.
போலீசார் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால், வாக்குவாதமும் சலகலப்பும் ஏற்பட்டது. இதையடுத்து, ஆசிரியர்கள் சிலரை மட்டும் அனுமதித்தனர். அவர்கள், உடனடியாக கலந்தாய்வை நடத்தி, பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அதிகாரிகளிடம் அளித்தனர்.