/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மன்னிப்பு கோரினார் மாநகராட்சி கமிஷனர் அபராத உத்தரவை திரும்ப பெற்றது ஐகோர்ட்
/
மன்னிப்பு கோரினார் மாநகராட்சி கமிஷனர் அபராத உத்தரவை திரும்ப பெற்றது ஐகோர்ட்
மன்னிப்பு கோரினார் மாநகராட்சி கமிஷனர் அபராத உத்தரவை திரும்ப பெற்றது ஐகோர்ட்
மன்னிப்பு கோரினார் மாநகராட்சி கமிஷனர் அபராத உத்தரவை திரும்ப பெற்றது ஐகோர்ட்
ADDED : ஜூலை 11, 2025 12:17 AM
சென்னை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் நேற்று ஆஜரானதால், அவருக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராத உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் திரும்பப் பெற்றது.
சென்னை மாநகராட்சியின், 5வது மண்டலமான ராயபுரத்தில், அங்கீகரிக்கப்படாத, சட்டவிரோத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, 2021 டிசம்பரில், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த உத்தரவுபடி, அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள்மீது, உரிய நடவடிக்கை எடுக்காததால், மாநகராட்சி கமிஷனருக்கு எதிராக, சென்னையை சேர்ந்த வழக்கறிஞரும், முன்னாள் கவுன்சிலருமான ருக்மாங்கதன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி சுந்தர்மோகன் அடங்கிய அமர்வு, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதற்காக, சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும், அந்த தொகையை கமிஷனரின் ஊதியத்தில் இருந்து பிடிக்கவும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி சுந்தர்மோகன் அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாநகராட்சி கமிஷனர் ஜெ.குமரகுருபரன் ஆஜரானார். மனுதாரர் தரப்பில் கே.பாலாஜி ஆஜராகி, ''விதிமீறலில் ஈடுபட்ட 4,000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்ட, 'நோட்டீஸ்' விபரங்களை வழங்க வேண்டும். அவற்றை ஆய்வு செய்யவும் அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.
அதைத்தொடர்ந்து, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ''நீதிமன்ற உத்தரவை வேண்டும் என்று மீறவில்லை. நடந்த தவறுக்கு முழு பொறுப்பேற்று, கமிஷனர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறோம்.
''இந்த விவகாரத்தை கண்காணிக்க, துணை கமிஷனர் அந்தஸ்தில், 'நோடல் அதிகாரி' ஒருவரை நியமித்துள்ளோம்,'' என்றார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள், 'மாநகராட்சி கமிஷனருக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை திரும்ப பெறப்படுகிறது. விதிமீறலில் ஈடுபட்டோருக்கு அளிக்கப்பட்ட நோட்டீஸ் ஆவணங்களை மனுதாரருக்கு வழங்குவதோடு, அவற்றை ஆய்வு செய்யவும், அவரை அனுமதிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.
மேலும், வழக்கின் அடுத்த விசாரணையில், மாநகராட்சி கமிஷனர் நேரில் ஆஜராகுவதில் இருந்து, நீதிபதிகள் விலக்களித்தனர்.

