/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ஆக்ரோஷ' நாய்களை வளர்க்க தடை; கட்டுப்பாடுகள் விதித்தது மாநகராட்சி
/
'ஆக்ரோஷ' நாய்களை வளர்க்க தடை; கட்டுப்பாடுகள் விதித்தது மாநகராட்சி
'ஆக்ரோஷ' நாய்களை வளர்க்க தடை; கட்டுப்பாடுகள் விதித்தது மாநகராட்சி
'ஆக்ரோஷ' நாய்களை வளர்க்க தடை; கட்டுப்பாடுகள் விதித்தது மாநகராட்சி
UPDATED : ஆக 21, 2025 09:04 AM
ADDED : ஆக 21, 2025 01:12 AM
சென்னை, நாய் உள்ளிட்ட செல்ல பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை, சென்னை மாநகராட்சி விதித்துள்ளது.
சென்னை ஜாபர்கான்பேட்டை வி.எஸ்.எம்., கார்டனில், 'பிட்புல்' வகை வளர்ப்பு நாய் கடித்து, கருணாகரன் என்ற சமையல்காரர் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். அந்த நாயை வளர்த்து வந்த பூங்கொடி என்பவரும், நாய் கடிக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபோன்ற சென்னை முழுதும் நாய் கடி சம்பவங்கள் தொடர்வது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகள் வளர்ப்போருக்கு நேற்று, சென்னை மாநகராட்சி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதுகுறித்த விபரம்:
* சென்னை முழுதும் வளர்ப்பு நாய்கள், பொதுமக்களை தாக்கும் சம்பங்கள் குறித்து புகார்கள் தொடர்கின்றன. செல்லபிராணிகளின் உரிமையாளர்கள் கட்டாயம், சென்னை மாநகராட்சியின் உரிமம் பெற்றிருக்க வேண்டும்
* செல்லபிராணிகளுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தியும், முறையான உணவு, தண்ணீர் மற்றும் இருப்பிடத்தை வழங்கியும் பராமரிக்க வேண்டும்
* கழுத்து பட்டையுடன் சங்கிலி இல்லாமல் பொது இடங்களுக்கு அழைத்து செல்லக்கூடாது
* வீடுகள், தெருக்கள், பூங்காக்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் முகமூடி இல்லாமல், நாய்களை அழைத்து சென்றால், உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
* பொதுமக்களுக்கு அச்சமூட்டும் வகையில் ஆக்ரோஷமான தன்மை கொண்ட நாய்களை வளர்க்க கூடாது. பொது இடங்களுக்கு ஒரே நேரத்தில், ஒரு செல்ல பிராணியை மட்டுமே அதன் உரிமையாளர்கள் அழைத்து செல்லவேண்டும்
* உரிமம் பெற்ற, வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி செலுத்திய நாய்கள் மட்டுமே வெளியிடங்களுக்கு அழைத்து செல்ல அனுமதிக்கப்படும்
* பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், அவற்றை உரிமையாளர்கள் வளர்க்க வேண்டும். பொது இடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளின் லிப்ட் ஆகியவற்றில், அச்சமூட்டும் வகையில் நாய்களின் நடவடிக்கைகள் இல்லாதிருப்பதை உறுதி செய்ய வேண்டியது உரிமையாளர்களின் பொறுப்பு
* இந்திய பிராணிகள் நலவாரியம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்படி இந்த விதிகளை கடைபிடிக்க வேண்டும். இதைமீறி செயல்படும் நாய்களின் உரிமையாளர்கள் மீது குற்றவியல் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும்.
இவ்வாறு, சென்னை மாநகராட்சி கட்டுப்பாடுகளை அறிவுறுத்தியுள்ளது.
***