ADDED : அக் 10, 2024 12:57 AM
மணிமங்கலம்,
குரோம்பேட்டை, பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்த், 32. மணிமங்கலம் காவல் நிலையத்தில், முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார்.
நேற்று நள்ளிரவு, 12:50 மணிக்கு, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகார் குறித்து விசாரிப்பதற்காக, மாடம்பாக்கம், பாலாஜி நகருக்கு சென்றார்.
அங்கு, அப்பகுதியைச் சேர்ந்த சிவா என்கிற மெக்கானிக் சிவா, 54, என்பவர், போதையில் பக்கத்து வீட்டில் தகராறு செய்து கொண்டிருந்தார்.
அதுகுறித்து காவலர் ஆனந்த் விசாரித்துள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டு, ஆத்திரமடைந்த மெக்கானிக் சிவா, காவலர் ஆனந்தின் சீருடையை கிழித்து, தாக்கியுள்ளார்.
இதில், காயமடைந்த ஆனந்த், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இதுகுறித்து, அவர் கொடுத்த புகாரின் படி, மெக்கானிக் சிவாவை, மணிமங்கலம் போலீசார் நேற்று கைது செய்தனர்.