/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிறந்த குழந்தையை குட்டையில் வீசிய பெண்
/
பிறந்த குழந்தையை குட்டையில் வீசிய பெண்
ADDED : நவ 15, 2024 01:30 AM
ஸ்ரீபெரும்புதுார்,
படப்பை அடுத்த, ஒரகடம் அருகே, காரணித்தாங்கல் பகுதியில் தனியார் பெண்கள் விடுதி இயங்கி வருகிறது. இங்கு, தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி, ஒரகடம் பகுதியில் இயங்கிவரும் தனியார் தொழிற்சாலையில் பணி புரிந்து வருகின்றனர்.
நேற்று காலை பணிக்கு சென்ற பெண்கள், மாலை 5:30 மணிக்கு விடுதிக்கு திரும்பினர். அப்போது, வாசலில் ரத்தக்கறை இருப்பதை கண்டனர். பின்னர், ரத்தக்கறையை பின் தொடர்ந்து விடுதியில் உள்ள ஒரு அறையில் சென்று பார்த்த போது, வடமாநில பெண் ஒருவர் ரத்தப்போக்கு ஏற்பட்டு மயங்கி கிடந்தார்.
உடனடியாக, 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதித்த போது, அந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்திருப்பதை அறிந்தனர். பின்னர், அறையில் இருந்து ரத்தக்கறையை பின் தொடர்ந்து சென்ற போது, விடுதியின் பின்புறம் உள்ள குட்டையில், குழந்தை சடலமாக இருப்பதை கண்டனர்.
இதையடுத்து, பெண் குழந்தையின் சடலத்தைமீட்டனர். பின், பிரசவத்திற்கு பின் அதிக ரத்தப்போக்கில் இருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சஹான பேகம், 22, என்பவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இது குறித்த தகவலின் படி, ஒரகடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.