/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தரமணியில் வாலிபர் கொலை மூன்று பேர் போலீசில் சரண்
/
தரமணியில் வாலிபர் கொலை மூன்று பேர் போலீசில் சரண்
ADDED : மே 13, 2025 12:36 AM

தரமணி :தரமணி எம்.ஜி.நகரை சேர்ந்தவர் அஸ்வின், 25; பெயின்டர். இவர், தரமணி ரயில் நிலையம் அருகில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
தரமணி போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, கொலையாளிகள் குறித்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், தரமணி அகஸ்தியர் தெருவை சேர்ந்த மோகனசுந்தரம், 26, பரத்ராஜ், 19, சங்கர் 23, ஆகிய மூவரும், நேற்று காலை, தரமணி காவல் நிலையத்தில் சரணடைந்து, 'நாங்கள்தான் அஸ்வினை கொலை செய்தோம்' என்று கூறினர்.
மூன்று பேரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:
அஸ்வினும், கொலையாளிகளும் நண்பர்களாக இருந்தனர். ஒரு ஆண்டுக்கு முன், ஒரு துக்க வீட்டில் அஸ்வினுக்கும், சங்கருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
சங்கரை அஸ்வின் தாக்கியுள்ளார். இது தொடர்பாக, இவர்களுக்குள் முன் விரோதம் இருந்தது.
அஸ்வின் மது போதையில், அடிக்கடி சங்கரை வம்புக்கு இழுத்து, தகாத செய்துள்ளார். இதனால், அஸ்வினை கொலை செய்ய முடிவு செய்துள்னர்.
கடந்த 11ம் தேதி இரவு, மது போதையில் வீட்டில் இருந்த அஸ்வினை மூன்று பேரும் ஆட்டோவில் வலுக்கட்டாயமாக இழுத்து சென்றனர்.
ரயில் நிலையம் அருகில் மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்று, மீண்டும் அஸ்வினுக்கு மது வாங்கி கொடுத்தனர்.
போதையில் நிலை தடுமாறிய அஸ்வினை சங்கர் பிடித்துக் கொள்ள, மோகனசுந்தரம், பரத்ராஜ் ஆகியோர் சேர்ந்து, கழுத்து, வாய், மார்பு பகுதியில் சரமாரியாக வெட்டி, அஸ்வினை கொலை செய்துள்ளனர்.
கொலை செய்ய பயன்படுத்திய கத்தி மற்றும் மொபைல் போன்களை பள்ளிக்கரணையில் உள்ள ஒரு குளத்தில் வீசியுள்ளனர். அவற்றை மீட்டெடுத்தோம். கொலைக்கு வேறு ஏதாவது காரணம் இருக்குமா என தீவிர விசாரணை நடத்துகிறோம்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
***