UPDATED : ஆக 12, 2026 11:05 PM
ADDED : ஆக 12, 2026 06:23 PM
திருவொற்றியூர்: குழந்தை வரம் தந்தருளும், ஆடிப்பூரம் வடிவுடையம்மனுக்கு ஆகஸ்ட் 14ல் வளைகாப்பு உத்சவம் நடக்கிறது.
திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், நடப்பாண்டு ஆடிப்பூர வளைகாப்பு உத்சவம், நாளை மாலை 6:00 மணிக்கு நடக்கிறது. முன்னதாக, அகத்தீஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோவிலில் இருந்து, 51 சீர்வரிசை தட்டுகள் ஊர்வலமாக கொண்டு வரப்படும்.
பின், சிறப்பு அலங்காரத்தில், பல்லக்கில் எழுந்தருளும் வடிவுடையம்மன் உற்சவ தாயார், கோவில் உள்பிரகாரத்தை வலம் வந்து, பல வண்ண வளையல்களால் அலங்கரிப்பட்ட வசந்த மண்டபத்தின் ஊஞ்சலில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இந்த வடிவுடையம்மன் ஆடிப்பூர வளைகாப்பில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தால், குழந்தை வரம், செல்வம், கல்வி, குடும்ப ஒற்றுமை உள்ளிட்ட பலன்கள் கிட்டும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
எனவே வளைகாப்பு வைபவத்தில் பங்கேற்க, திருவொற்றியூர் மட்டுமின்றி சென்னையின் பல பகுதிகளில் இருந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
