/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிக்கு மாற்றம்
/
தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிக்கு மாற்றம்
ADDED : பிப் 22, 2024 12:54 AM

திருப்போரூர். கேளம்பாக்கத்தில், செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிர்வாகம், 2018ல் தனியார் நிதி நிறுவனத்தில் 4 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது. கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால், கடன் தொகை செலுத்தப்படவில்லை.
இதையடுத்து, தனியார் நிதி நிறுவனம், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்ற உத்தரவின்படி, பள்ளியின் ஒரு பகுதியான மூன்று மாடி அலுவலகம் மற்றும் வகுப்பறை கட்டடத்திற்கு, நேற்று முன்தினம் 'சீல்' வைக்கப்பட்டது.
வழக்கம்போல், நேற்று மாணவ - மாணவியர் பள்ளிக்கு வந்தனர். குறிப்பிட்ட கட்டடத்தை பயன்படுத்த முடியாததால், போதிய இடவசதி, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாமல் அவதிப்பட்டனர்.
மேலும், பள்ளி வளாகத்தில் தரையில் அமர்ந்து, பாடம் படித்தனர். இதையறிந்த பெற்றோர், பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க கோரி, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த பள்ளி கல்வித்துறை, காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள், பெற்றோரிடமும், பள்ளி நிர்வாகத்திடமும் பேச்சு நடத்தினர். பள்ளி கல்வித் துறை சார்பில், மாணவர்களின் நலன் கருதி, பொதுத்தேர்வு எழுத உள்ள 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், மூன்று மாதம் வரை கேளம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மற்ற வகுப்பு மாணவர்கள், அதே பள்ளி அல்லது தனியார் வாடகை கட்டடத்தில் கல்வியை தொடர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.