/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பணிமனைகளில் பயணியரை ஏற்றி இறக்க கூடாது: ஆம்னி பஸ்களுக்கு போக்குவரத்து கமிஷனர் உத்தரவு
/
பணிமனைகளில் பயணியரை ஏற்றி இறக்க கூடாது: ஆம்னி பஸ்களுக்கு போக்குவரத்து கமிஷனர் உத்தரவு
பணிமனைகளில் பயணியரை ஏற்றி இறக்க கூடாது: ஆம்னி பஸ்களுக்கு போக்குவரத்து கமிஷனர் உத்தரவு
பணிமனைகளில் பயணியரை ஏற்றி இறக்க கூடாது: ஆம்னி பஸ்களுக்கு போக்குவரத்து கமிஷனர் உத்தரவு
UPDATED : பிப் 14, 2024 07:21 AM
ADDED : பிப் 14, 2024 01:08 AM

சென்னை: 'ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளில், பயணியரை ஏற்றி, இறக்க கூடாது' என, அரசு போக்குவரத்து கமிஷனர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரவில் அவர் கூறியுள்ளதாவது:
சென்னை, கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தை, பயணியரின் முழு பயன்பாட்டிற்குக் கொண்டு வந்த பின்னர், அதை எதிர்த்து, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த 9ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதன்படி, ஆம்னி பேருந்துகள், சென்னை புற வழிச்சாலையில் உள்ள போரூர் சுங்கச்சாவடி மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடி ஆகிய, இரு இடங்களில் மட்டும் பயணியரை ஏற்றி, இறக்குவதற்கு அனுமதிக்கப்பட்டு உள்ளது.
சென்னை மாநகருக்குள் உள்ள ஆம்னி பேருந்து பணிமனைகளுக்கு, வாகனங்களைக் கொண்டு வருவது குறித்து குறிப்பிட்டுள்ளதை தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.
அந்தப் பணிமனைகள் அமைந்துள்ள இடங்களிலும் பயணியரை ஏற்றி, இறக்கலாம் என தவறான கருத்து உருவாக்கத்தை, அனைத்து ஊடகங்கள் வாயிலாக, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பரப்பி வருகின்றனர்.
இவ்வாறு பணிமனைகள் அமைந்துள்ள இடங்களில், பயணியரை ஏற்றி, இறக்குவதற்கு, உயர் நீதிமன்றம் எந்த உத்தரவையும் வழங்கவில்லை. அது மட்டுமல்லாமல், அவ்வாறு செய்வது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை.
எனவே, தவறான கண்ணோட்டத்துடன், தங்களது லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்கும் ஆம்னி பேருந்துகளின் மீது, மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை உயர் நீதிமன்றம் தன் இடைக்கால உத்தரவில் தெரிவித்துள்ளவாறு, சென்னை புறவழிச் சாலையில் அமைந்துள்ள போரூர் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகள் மட்டுமே, பயணியரை ஏற்றி, இறக்கும் இடங்களாக, தங்களது பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்யும் செயலிகளில் குறிப்பிட வேண்டும்.
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சிலரின் தவறான புரிதலின் காரணமாக, பொது மக்களிடையே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

