ADDED : ஏப் 16, 2026 04:37 PM
செம்மஞ்சேரி:சிக்கன் ரைஸ் வாங்கும்போது ஏற்பட்ட தகராறில், பெயின்டரை கல்லால் தாக்கிய இரண்டு பேரை, போலீசார் கைது செய்தனர்.
பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் வினோத்குமார், 37. பெயின்டர். நேற்று முன்தினம் இரவு, போதையில் செம்மஞ்சேரி, சுனாமி நகரில் உள்ள ஒரு கடையில் சிக்கன் ரைஸ் வாங்க சென்றார்.
அப்போது, ரைஸ் போடும் நபரிடம், 'சிக்கன் அதிகமாக போடு' என கூறியுள்ளார். அங்கு, ஏற்கனவே சிக்கன் ரைஸ் வாங்க போதையில் நின்ற இரண்டு பேர், 'உனக்கு மட்டும் எப்படி சிக்கன் அதிகமாக போடுவாங்க' என கேட்க, இரண்டு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த இரண்டு பேரும் சேர்ந்து, கீழே கிடந்த கற்களை எடுத்து, வினோத்குமாரை சரமாரியாக தாக்கினர். இதில், அவர் பலத்த காயமடைந்து, அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
புகாரின்படி விசாரித்த செம்மஞ்சேரி போலீசார், பெரும்பாக்கத்தை சேர்ந்த சோபன்பாபு, 32, சுதாகர், 48, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.
