/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கூரியரில் போதை பொருள் வரவழைத்து மாணவர்களுக்கு விற்ற இருவர் கைது
/
கூரியரில் போதை பொருள் வரவழைத்து மாணவர்களுக்கு விற்ற இருவர் கைது
கூரியரில் போதை பொருள் வரவழைத்து மாணவர்களுக்கு விற்ற இருவர் கைது
கூரியரில் போதை பொருள் வரவழைத்து மாணவர்களுக்கு விற்ற இருவர் கைது
ADDED : பிப் 23, 2026 05:57 AM

சென்னை: தாய்லாந்தில் இருந்து கூரியரில் மெத் ஆம்பெட்டமைன், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை வரவழைத்து, சென்னையில் உள்ள கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோரை தொடர்ந்து கண்காணித்து, அவர்களின் 'நெட்ஒர்க்' குறித்து துப்பு துலக்க, ஏ.என்.ஐ.யு., எனும் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு செயல்படுகிறது.
இப்பிரிவு போலீசாருக்கு, சென்னையில் உள்ள கும்பல், வெளிநாடுகளில் இருந்து கூரியர் வாயிலாக போதை பொருட்களை வரவழைத்து விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அக்கும்பல் குறித்து விசாரித்து வந்தனர். அப்போது போதை பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இருவர், மதுரவாயல் அருகே, வானகரம் பகுதியில் இரண்டு கார்களில் போதை பொருட்களுடன் செல்வது தெரியவந்தது.
அந்த இரண்டு கார்களையும் வழிமறித்து, போலீசார் சோதனை செய்தனர். அதில், 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 18 கிராம் மெத் ஆம்பெட்டமைன் மற்றும் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இரண்டு கார்களையும் ஓட்டி வந்த, வியாசர்பாடியைச் சேர்ந்த தினேஷ், 34; கொரட்டூரைச் சேர்ந்த மெக்கலன் ட்ரெவர், 43, ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.
இவர்கள் மீது ஏற்கனவே போதை பொருள் கடத்தல் வழக்கு இருப்பதும், தினேஷ்குமார் பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருவதும், மெக்கலன் ட்ரெவர், இருசக்கர வாகன மெக்கானிக் என்பதும் தெரியவந்தது.
இவர்கள், தாய்லாந்தில் இருந்து, கூரியர் நிறுவனம் வாயிலாக, சென்னைக்கு போதை பொருட்களை வரவழைத்து, கல்லுாரி மாணவர்கள், மென்பொருள் நிறுவன ஊழியர்கள் மற்றும் சினிமா துறையைச் சேர்ந்தோருக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இவர்களிடம் இருந்து, போதை பொருட்கள் மற்றும் இரண்டு கார்கள், 1.12 லட்சம் ரூபாய் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

