/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வியாபாரிக்கு உதவுவது போல நடித்து 1.2 கிலோ தங்கம் திருடிய இருவர் கைது
/
வியாபாரிக்கு உதவுவது போல நடித்து 1.2 கிலோ தங்கம் திருடிய இருவர் கைது
வியாபாரிக்கு உதவுவது போல நடித்து 1.2 கிலோ தங்கம் திருடிய இருவர் கைது
வியாபாரிக்கு உதவுவது போல நடித்து 1.2 கிலோ தங்கம் திருடிய இருவர் கைது
ADDED : ஜூலை 22, 2025 12:46 AM
சென்னை, இருசக்கர வாகனத்தில் சென்ற நகை வியாபாரி திடீரென மயங்கியபோது, அவருக்கு உதவுவது போல நடித்து, 1.2 கிலோ தங்க கட்டிகளை திருடிய ஆட்டோ ஓட்டுனர்கள் இருவரை, போலீசார் கைது செய்து, தங்க கட்டிகளை மீட்டனர்.
சவுகார்பேட்டை, நம்மாழ்வார் ஐந்தாவது தெருவைச் சேர்ந்தவர் ராம்கோபால் மாஜி, 54; நகை வியாபாரி. கடந்த 19ம் தேதி, தி.நகரில் ஓரிடத்தில் நகை கட்டிகளை வாங்கிய அவர், ஒரு பையில் பாதுகாப்பாக சுற்றி வைத்து, அண்ணா சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
சிம்சன் சிக்னல் அருகே, திடீரென மயக்கம் வந்து வாகனத்தில் இருந்து விழுந்தார். பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்றாலும், இரு ஆட்டோ ஓட்டுனர்கள் அவருக்கு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பினர். மருத்துவமனையில் பையை பார்த்தபோது அதிலிருந்த, 1.2 கிலோ தங்க கட்டிகள் மாயமானது தெரிந்தது.
இச்சம்பவம் குறித்து, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதில், அன்னை சத்யா நகர், காமராஜர் சாலையைச் சேர்ந்த ராஜசேகர், 34, புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 26, ஆகிய இருவரும், மயங்கிய நகை வியாபாரிக்கு உதவுவதுபோல நடித்து, அவரிடமிருந்து நகை கட்டிகளை திருடியது தெரியவந்தது. தொடர்ந்து, இருவரையும் கைது செய்த போலீசார், திருடிய நகை கட்டிகளை முழுவதுமாக பறிமுதல் செய்தனர்.
புகார் கொடுத்த 24 மணி நேரத்திற்குள் நகை திருடியவர்களை கைது செய்து, திருடுபோன நகை கட்டிகளை பறிமுதல் செய்து உரிமையாளரிடம் ஒப்படைத்த காவல் துறையினரை, கமிஷனர் அருண் வெகுவாக பாராட்டினார்.