ADDED : ஏப் 13, 2026 04:37 AM
ஆவடி: ஆவடி அடுத்த திருநின்றவூர், சி.டி.எச்., சாலை டாட்டா ஸ்டீல் அருகே, தேர்தல் பறக்கும் படையினர், நேற்று முன்தினம் இரவு, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அவ்வழியாக வந்த, கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த கவுதம் என்பவர் மஹிந்திரா எக்ஸ்.யூ.வி., காரில், உரிய ஆவணங்களின்றி 1.25 லட்சம் ரூபாய் எடுத்து சென்றது தெரிந்தது. பறக்கும் படையினர் அவற்றை பறிமுதல் செய்து, ஆவடி அரசு கருவூலத்தில் நேற்று ஒப்படைத்தனர்.
திரு.வி.க., நகர் தொகுதிக்கு உட்பட்ட ஓட்டேரி குக்ஸ் சாலை பகுதியில், திருவான்மியூர், பாலவாக்கத்தைச் சேர்ந்த கலீல் ரகுமான், 37, என்பவர் ஓட்டி வந்த காரை, தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தினர்.
சோதனை செய்தபோது, காரில் உரிய ஆவணமில்லாத 2.32 லட்சம் ரூபாய் இருந்தது. துணி வியாபாரம் செய்து வரும் கலீல், வியாபார தேவைக்காக பணத்தைக் எடுத்துச் சென்றது தெரிய வந்தது.
பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், பெரம்பூர் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
