/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாற்றுத்திறனாளிகள் மரப்பாதை வியாபார நோக்கத்திற்காக பயன்பாடு
/
மாற்றுத்திறனாளிகள் மரப்பாதை வியாபார நோக்கத்திற்காக பயன்பாடு
மாற்றுத்திறனாளிகள் மரப்பாதை வியாபார நோக்கத்திற்காக பயன்பாடு
மாற்றுத்திறனாளிகள் மரப்பாதை வியாபார நோக்கத்திற்காக பயன்பாடு
ADDED : பிப் 02, 2026 05:40 AM

சென்னை: மாற்றுத்திறனாளிகள் எளிதாக மெரினா கடற்கரையை அணுகும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள மரப்பாதையை, அப்பகுதி வியாபாரிகள் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தி வீணாக்கி வருகின்றனர்.
மெரினா விவேகானந்தர் இல்லத்திற்கு எதிரே, 260 மீட்டர் நீளத்திற்கு, மாநகராட்சி சார்பில் மரப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. கை, கால்கள் இயக்க குறைபாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர், சக்கர நாற்காலி வழியே, கடற்கரையை எளிதில் அணுக அமைக்கப்பட்டுள்ளது.
மெரினாவில், 2022ல் துவக்கப்பட்ட இம்மரப்பால திட்டம், பெசன்ட் நகர் உட்பட பல்வேறு கடற்கரைகளுக்கும் விரிவுப் படுத்தப்பட்டு உள்ளது.
இத்திட்டம் துவங்கிய போதே, பொதுமக்கள் இதை பயன்படுத்தி இடையூறு ஏற்படுத்துவதாக, மாற்றுத்திறனாளிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இதையடுத்து, மாநகராட்சி மற்றும் காவல் துறை சார்பில், விவேகானந்தர் இல்லம் அருகே கூடுதல் காவலர்களை நியமித்து, மரப்பாதையை பொதுமக்கள் பயன்படுத்துவது தவிர்க்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், மெரினாவில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் சிலர், தங்கள் கடைக்கு வேண்டிய தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்ல, இப்பாதையை பயன்படுத்துகின்றனர்.
பூ வியாபாரம் செய்வோர், டீ விற்பனையாளர்கள் உள்ளிட்டோரும் பயன்படுத்தி, மரப்பாதையை வீணாக்கி வருகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் இதை கண்டுகொள்வதில்லை.
மாற்றுத்திறனாளிகள் சிலர் கூறுகையில், 'நீலக்கொடி சான்று திட்டத்தின் கீழ், மெரினா நீச்சல்குளம் அருகே மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள, 'போர்டோ மேட்' பாதையையும் பொதுமக்கள் தான் பயன்படுத்துகின்றனர். இவற்றையும் அவர்கள் வீணாக்கி வருகின்றனர்' என்றனர்.

