/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள் கந்தன்சாவடியில் போக்குவரத்து நெரிசல்
/
சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள் கந்தன்சாவடியில் போக்குவரத்து நெரிசல்
சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள் கந்தன்சாவடியில் போக்குவரத்து நெரிசல்
சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள் கந்தன்சாவடியில் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஆக 04, 2025 04:29 AM

கந்தன்சாவடி:கந்தன்சாவடி, எம்.ஜி.ஆர்., பிரதான சாலையை ஆக்கிரமித்து, ஏராளமான வாகனங்கள் நாள் கணக்கில் நிறுத்தப்படுகின்றன. இதனால், சாலை குறுகி, தினசரி காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கந்தன்சாவடி எம்.ஜி.ஆர்., பிரதான சாலையில், ஏராளமான ஐ.டி., நிறுவனங்கள், மின்வாரிய அலுவலகம், அரசு அலுவலகம், தனியார் மருத்துவமனை, அம்பேத்கர் பல்கலைக் கழகம் உள்ளிட்டவை அமைந்து உள்ளன.
மடிப்பாக்கம், புழுதிவாக்கம், வேளச்சேரி, விஜயநகர், தரமணி பகுதி மக்கள், ராஜிவ்காந்தி சாலையை அடைய, இச்சாலையைத் தான் பயன்படுத்துகின்றனர். நாள் ஒன்றுக்கு, பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
எம்.ஜி.ஆர்., சாலையின் இருபுறமும் ஏராளமான உணவகங்கள், சிற்றுண்டி கடைகள் அமைந்துள்ளன. அங்கு செல்வோர் சாலையிலேயே வாகனங்களை நிறுத்துகின்றனர்.
ஐ.டி., நிறுவனங்களில் பணிபுரிவோரை குறி வைத்து, அச்சாலையின் பல இடங்களில் ஆட்டோ ஸ்டாண்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும், தினசரி காலை முதல் இரவு வரை, நுாற்றுக்கணக்கான கால் டாக்சிகள் பல மணி நேரம் சாலையோரம் நிறுத்தப்படுகின்றன. போதாக்குறைக்கு, அச்சாலையில் ஏராளமான கனரக வாகனங்கள் உள்ளிட்ட பல வாகனங்கள், நாள் கணக்கில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
இவற்றால், நான்கு வழிப்பாதையான எம்.ஜி.ஆர்., சாலை, எப்போதும் இருவழி பாதையாகவே உள்ளது.
இப்பிரச்னையால், தினசரி 'பீக் ஹவர்ஸ்' எனப்படும் காலை, மாலை நேரங்களில், அச்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இது குறித்து, சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீசார் தனி கவனம் செலுத்தி, அச்சாலையில் நாள் கணக்கில் நிறுத்தப்படும் வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
காலை, மாலை நேரங்களில் ரோந்து சென்று, சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களை அகற்றி, இலகுவான போக்குவரத்திற்கு வழி செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.