/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
102 மீட்டர் குழாய் பதிக்க '3 ஆண்டு' கழிவுநீரால் திண்டாடும் வேளச்சேரி
/
102 மீட்டர் குழாய் பதிக்க '3 ஆண்டு' கழிவுநீரால் திண்டாடும் வேளச்சேரி
102 மீட்டர் குழாய் பதிக்க '3 ஆண்டு' கழிவுநீரால் திண்டாடும் வேளச்சேரி
102 மீட்டர் குழாய் பதிக்க '3 ஆண்டு' கழிவுநீரால் திண்டாடும் வேளச்சேரி
ADDED : அக் 14, 2024 03:34 AM
வேளச்சேரி:அடையாறு மண்டலம், 172, 175, 176, 177 ஆகிய வார்டுகள், வேளச்சேரி பகுதியை உள்ளடக்கியது.
இங்குள்ள கழிவுநீர், பெருங்குடி சுத்திகரிப்பு நிலையம் செல்கிறது. இதில், 172, 175 ஆகிய வார்டுகளில் சேரும் கழிவுநீர், நேராக பெருங்குடி செல்கிறது.
ஆனால், 176, 177 ஆகிய வார்டுகளில் சேரும் கழிவுநீர், எல்.ஐ.சி., காலனியில் உள்ள கழிவுநீர் உந்து நிலையத்தில் இருந்து, ஓ.எம்.ஆர்., --- எஸ்.ஆர்.பி., டூல்ஸ் உந்து நிலையம் வழியாக, 11 கி.மீ., பயணித்து பெருங்குடி செல்கிறது.
மயிலாப்பூர், அடையாறு பகுதியில் உள்ள கழிவுநீர், எஸ்.ஆர்.பி., டூல்ஸ் உந்து நிலையம் வழியாக செல்வதால், வேளச்சேரி பகுதி கழிவுநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால், 2013ல், வேளச்சேரியில் இருந்து நேராக பெருங்குடி செல்லும் வகையில், 4 கி.மீ.,க்கு, 100 செ.மீ., விட்டத்தில் குழாய் பதிக்கும் பணி துவங்கியது. இந்த பணியை, எஸ்.இ.டபிள்யூ., என்ற நிறுவனம் செய்தது. நிர்வாக குளறுபடியால், 2020ல், அந்நிறுவனம் பணியை பாதியில் நிறுத்தி வெளியேறியது.
மீதம், 600 மீட்டர் துாரம், ஆங்காங்கே இணைப்பு குழாய் பதிக்க வேண்டும்.
இந்த பணியை, 2021ம் ஆண்டு, வி.வி.வி., என்ற நிறுவனத்திற்கு, வாரியம் வழங்கியது.
மூன்று ஆண்டுகளில், 498 மீட்டர் துாரம் குழாய் பதிக்கப்பட்டது. பழைய நிறுவனம் போல், இந்த நிறுவனமும் பணியை பாதியில் நிறுத்தி உள்ளது.
இரண்டு ஆண்டில் முடிய வேண்டிய பணி, 11 ஆண்டுகள் ஆகியும் முடிக்காததால், வேளச்சேரி பகுதி கழிவுநீர் பிரச்னைக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என, பகுதிமக்கள் கவலைப்படுகின்றனர்.
வேளச்சேரி மக்கள் கூறியதாவது:
ஒவ்வொரு மழைக்கும், தரைத்தளம் மூழ்கி பெரும் பாதிப்பை சந்திக்கிறோம். இதில் கழிவுநீரும் சேர்வதால், நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இரண்டு நிறுவனங்கள் பணி செய்தும், 11 ஆண்டுகளாக, 4 கி.மீ., குழாயை பதிக்க முடியவில்லை. மீதமுள்ள, 102 மீட்டர் நீளத்திற்கு குழாய் பதித்தால், கழிவுநீர் பிரச்னைக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும்.
வரும் பருவமழைக்கு கழிவுநீரால் பிரச்னை இருக்காது என கடந்த ஆண்டு நினைத்தோம். ஏமாற்றம் தான் மிஞ்சியது.
எம்.எல்.ஏ., --- எம்.பி., மற்றும் கவுன்சிலர்களிடம் கூறியும் எந்த பயனும் இல்லை. வரும் மழைக்கும், கழிவுநீரில் தான் மிதக்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பலமுறை வலியுறுத்தியும், ஒப்பந்த நிறுவனம் அசைந்து கொடுக்கவில்லை. மிகவும் அலட்சியமாகவே செயல்படுகிறது. எங்கள் பேச்சை மதிப்பதே இல்லை. வேளச்சேரி போல் மயிலாப்பூரில், இதே போன்று பணி எடுத்து பாதியில் நிறுத்தியது. மக்கள் கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை. உயர் அதிகாரிகள் தான் தலையிட வேண்டும்' என்றனர்.