/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேளச்சேரி, பெருங்குடி நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு 120 கட்டடங்களை இடிக்க அடையாள குறியீடு
/
வேளச்சேரி, பெருங்குடி நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு 120 கட்டடங்களை இடிக்க அடையாள குறியீடு
வேளச்சேரி, பெருங்குடி நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு 120 கட்டடங்களை இடிக்க அடையாள குறியீடு
வேளச்சேரி, பெருங்குடி நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு 120 கட்டடங்களை இடிக்க அடையாள குறியீடு
ADDED : ஜூன் 18, 2025 12:31 AM

சென்னை, வேளச்சேரி மற்றும் பெருங்குடி ரயில் நிலையங்கள் அருகே, சதுப்பு நிலத்திற்கு செல்லும் நீர்வழிபாதையில் உள்ள, 120க்கும் மேற்பட்ட கட்டடங்களை இடிக்க, கட்டடங்களில் அடையாள குறியீடு போடும் பணியில், வருவாய்த்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
அடையாறு மண்டலம், 177வது வார்டு, வேளச்சேரி ரயில்வே சாலையை ஒட்டி, 10 ஏக்கருக்கு மேல் அரசு இடம் உள்ளது. இதில், ஆக்கிரமிப்பில் இருந்த, 3.50 ஏக்கர் இடம் மீட்கப்பட்டது.
அதில், 2024 நவ., மாதம், 10 அடி ஆழத்தில் இரண்டு குளங்கள் வெட்டப்பட்டன. மாநகராட்சி சார்பில், குளத்தை சுற்றி, 20 கோடி ரூபாயில் 'சமூக சோலை' பூங்கா அமைக்கப்பட உள்ளது.
வேளச்சேரி பகுதி நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பிலும், நீர்வழித்தடங்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, அரசுக்கு பல்வேறு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கிடையில், நீர்வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை அகற்ற வேண்டும் என, வேளச்சேரி டான்சி நகர் நலச்சங்கம் சார்பில், நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
ஆக்கிரமிப்பு இடங்கள், வேளச்சேரி மற்றும் பள்ளிக்கரணை தாலுகா எல்லையில் உள்ளன. வேளச்சேரி தாலுகா சர்வே எண்ணை போலியாக பயன்படுத்தி, பள்ளிக்கரணை தாலுகா அரசு இடத்தை ஆக்கிரமித்துள்ளனர்.
மேலும், வேளச்சேரி தாலுகா இடத்தில் உள்ள அரசு இடங்களையும் ஆக்கிரமித்துள்ளது தெரிந்தது. இந்த வகையில், 120க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இருப்பது தெரியவந்தது.
இதில், 60க்கும் மேற்பட்டோர் பத்திரப்பதிவு செய்து, பட்டாவும் பெற்றுள்ளனர். ஜூன் 12ம் தேதிக்குள் சர்வே செய்து, ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டி, ஏப்., மாதம் இரு தாலுகா பகுதிகள் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் அறிக்கை மற்றும் வரைபடம், சென்னை மாவட்ட கலெக்டரிடம் அனுப்பி வைக்கப்பட்டது.
அவரின் உத்தரவின்பேரில், ஆக்கிரமிப்பு இடங்களை அடையாள குறியீடு செய்யும் பணியில், வருவாய்த் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐந்து நாட்களில் நோட்டீஸ் வழங்கி, பருவமழைக்கு முன் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீரோட்ட பாதையை சீராக்க முடிவு செய்துள்ளனர். இதனால், வேளச்சேரி, தரமணி பகுதியில் வெள்ள பாதிப்பு கணிசமாக குறையும் என, வருவாய்த்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.