/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விதிமீறல் இணையதள கம்பம்: நிறுவனங்களுக்கு மாநகராட்சி தாராளம் அபராதம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1,000 ஆக குறைப்பு
/
விதிமீறல் இணையதள கம்பம்: நிறுவனங்களுக்கு மாநகராட்சி தாராளம் அபராதம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1,000 ஆக குறைப்பு
விதிமீறல் இணையதள கம்பம்: நிறுவனங்களுக்கு மாநகராட்சி தாராளம் அபராதம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1,000 ஆக குறைப்பு
விதிமீறல் இணையதள கம்பம்: நிறுவனங்களுக்கு மாநகராட்சி தாராளம் அபராதம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1,000 ஆக குறைப்பு
UPDATED : ஜன 31, 2026 07:31 AM
ADDED : ஜன 31, 2026 05:22 AM

சென்னை: அனுமதியின்றி நடப்படும் தனியார் நிறுவன இணையதள கம்பங்களுக்கான அபராதம், ஒரு லட்சம் ரூபாயில் இருந்து, 1,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கண்டபடி கேபிள்கள் சுற்றி தொங்கும் கம்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
சென்னை மாநகராட்சி மாதாந்திர கூட்டம், மேயர் பிரியா தலைமையில், ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது.
இதில், கமிஷனர் குமரகுருபரன், கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், 113 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சாலை வெட்டு
அதில், தனியார் இணைய தள நிறுவனங்கள், இஷ்டம்போல் கம்பங்கைளை நட வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதுபற்றிய தீர்மானம்:
இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள், 1.90 லட்சம் கம்பங்கள் நட்டு சேவையை வழங்கி வருகின்றன. அனுமதியின்றி கம்பம் நட்டால், ஒரு கம்பத்திற்கு, 50,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.
அபராத தொகையை செலுத்த பெறு நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்ததால், கட்டண தொகை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனுமதியின்றி இணையதள சேவை கம்பம் நட்டால், 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.
வைப்பு தொகையாக, 5,000 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் என, பெரு நிறுவனங்களுக்கு மாநகராட்சி தாராளம் காட்டியுள்ளது.
சென்னையில் ஏற்கனவே, பைபர் நெட் உள்ளிட்ட இணைய சேவைகளை வழங்கும் தனியார் நிறுவனங்கள், இஷ்டம்போல் கம்பங்களை நட்டும், கேபிள்களை கண்டபடி தொங்கவிட்டும் உள்ளன.
தற்போது அபராதம் குறைப்பால், இத்தகைய கம்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து, விபத்துக்கும் வழிவகுக்கும் அபாயம் உள்ளது.
சென்னையில் அனுமதியின்றி சாலை வெட்டு பணியில் ஈடுபட்டால், பேருந்து சாலைகளுக்கு 2 லட்சம் ரூபாய்; உட்புற சாலைகளுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். போலீசிலும் புகார் அளிக்கப்படும் என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
கெடுபிடி வேண்டாம்
கூட்டத்தில் நடந்த விவாதம்:
ஜெயராமன், 4வது வார்டு மா.கம்யூ., கவுன்சிலர்: சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டை வைத்திருந்தும், ஆக்கிரமிப்பு என்ற பெயரில் கடைகளை அகற்றி, அதிகாரிகள் அபராதம் விதிக்கின்றனர். இந்த நடவடிக்கை தேர்தல் நேரத்தில் சிக்கலை ஏற்படுத்தும்.
துணை மேயர் மகேஷ் குமார்: அபராதம் விதிப்பது மாநகராட்சியின் நோக்கமல்ல; சாலையோர வியாபாரிகளை ஒழுங்குப்படுத்துகிறோம். கெடுபிடி காட்ட வேண்டாம் என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும்.
அம்பேத்வளவன், 73வது வார்டு வி.சி., கவுன்சிலர்: என் வார்டில் 24 மணி நேரமும் பிரியாணி கடைகள் செயல்படுகின்றன.
அங்கு வருவோர், தடை செய்யப்பட்ட பல்வேறு போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சப்படுகின்றனர்.
மேயர் பிரியா: சென்னையில், சில கடைகள் 24 மணி நேரம் செயல்பட உரிமை உள்ளது. அப்பகுதியில் ஒழுங்கு படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

