கணினிவழி குலுக்கல் முறையில் ஓட்டுப்பதிவு இயந்திரம் ஒதுக்கீடு
கணினிவழி குலுக்கல் முறையில் ஓட்டுப்பதிவு இயந்திரம் ஒதுக்கீடு
ADDED : மார் 23, 2026 11:10 PM
சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு, கணினி குலுக்கல் முறையில் ஓட்டுப்பதிவு இயந்திரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், சென்னை மாவட்டத்தில் உள்ள, 16 சட்டசபை தொகுதிகளுக்கு, கணினி வாயிலாக குலுக்கல் முறை நேற்று நடந்தது.
அதன்படி, ஓட்டுப்பதிவு இயந்திரம், ஓட்டு செலுத்தியப்பின் சரிபார்க்கும் இயந்திரங்கள் ஆகியவை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன், ஒதுக்கீடு செய்யப்பட்டன.
ஒதுக்கீடு நிறைவடைந்ததும், தொகுதி வாரியாக ஒதுக்கப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர்கள், தங்களது ஓட்டுகளை சரிபார்க்கும் இயந்திரங்களின் பட்டியல், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்ற, தமிழக பா.ஜ., செயலர் கராத்தே தியாகராஜன் அளித்த பேட்டி:
சென்னையில் சில தொகுதிகளில், போலீசார் ஒருதலைபட்சமாக செயல்படுகின்றனர். சில தொகுதிகளில் பணம் பட்டுவாடா நடக்கிறது. ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும், பறக்கும் படையினர் ஒரு நாளைக்கு எத்தனை வாகனங்களில் சோதனை நடத்துகின்றனர். எவ்வளவு தொகை பறிமுதல் செய்கின்றனர் போன்ற விபரங்களை கேட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
