ADDED : ஜூலை 12, 2025 10:37 PM

டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கடந்த 2021ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி பெற்ற ஓட்டு சதவீதம், 42.49; தி.மு.க., கூட்டணியை விட, 2.42 சதவீதமே குறைவு. வரும் சட்டசபையில் தி.மு.க., அரசின் அதிருப்தி ஓட்டுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அ.தி.மு.க., கூட்டணியே வெல்லும்' என, இப்பகுதியில் வாசகர் ஒருவர் எழுதியிருந்தார்.
ஆனால், வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு, அ.தி.மு.க.,வுடன் பா.ஜ., கூட்டணியை உறுதி செய்துள்ளதே தவிர, இன்னும் இறுதியாகவில்லை என்பதே உண்மை.
கடந்த மாதம் கூட்டணியை உறுதி செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'அ.தி.மு.க., கூட்டணிக்கு தலைமை வகிக்கும்; அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி தான் முதல்வர். அமைச்சரவையில் பா.ஜ., அங்கம் வகிக்கும்' என்றார்.
அடுத்த முறை அமித் ஷா தமிழகம் வந்தபோதோ, 'தேசிய ஜனநாயக கூட்டணிதான் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும். அ.தி.மு.க.,வில் ஒருவர் முதல்வர் ஆவார்' என்று பேட்டியளித்தார்.
அப்படியானால், அமித் ஷா முதலில் எடுத்த நிலைப்பாட்டை மாற்றியது யார்?
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலையோ, 'தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ., தான் ஆட்சி அமைக்கும்' என்று பேசியுள்ளார்.
இது, அ.தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 2.66 சதவீதம் ஓட்டு வைத்திருக்கும் பா.ஜ., 33.29 சதவீதம் ஓட்டு வைத்திருக்கும் அ.தி.மு.க.,வின் முதல்வர் வேட்பாளரை தீர்மானிப்பது வேடிக்கையாக உள்ளது.
இதுபோன்ற பேச்சுகள், மக்கள் மத்தியில் அ.தி.மு.க.,வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி, தி.மு.க.,வுக்கு சாதகமாக அமைந்து விடும். பார்லிமென்ட் தேர்தலுக்குதான் தேசிய ஜனநாயக கூட்டணி பொருந்துமே தவிர, சட்டசபை தேர்தலுக்கு பொருந்தாது.
தி.மு.க., கூட்டணி கட்சியினர், 'தி.மு-.க., கூட்டணிக்கு ஓட்டளியுங்கள்' என்றுதான் பிரசாரம் செய்வர். அ.தி.மு.க., கூட்டணியை தேசிய ஜனநாயக கூட்டணி என்றால், தெலுங்கு தேசம் உட்பட வடமாநில கட்சிகளும் தமிழகத்தில் இருக்கின்றனவா என்ன!
எனவே, 'அ.தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளியுங்கள்' என்று சொல்வதுதான் சரி. இதை சொல்ல அ.ம.மு.க., - த.மா.கா., போன்ற கட்சிகளுக்கு என்ன தயக்கம்?
அத்துடன், தேர்தலுக்கு முன்பே, 'கூட்டணி ஆட்சி' என்ற கோஷத்தை தவிர்க்க வேண்டும்.
திருமணமே ஆகாத நிலையில், குழந்தைக்கு பெயர் வைக்க என்ன அவசரம்?
தேர்தல் நடந்த பின் அதுகுறித்து இருதரப்பும் பேசிக் கொள்ளலாமே!
தமிழக அரசியலின் உண்மை நிலவரத்தை பா.ஜ., மேலிடத் தலைவர்களான நட்டா, அமித் ஷா போன்றோரிடம் தமிழக பா.ஜ., தலைவர்கள் எடுத்துக் கூற வேண்டும்.
இதை கடந்த பார்லிமென்ட் தேர்தலில் சொல்லாமல் போனதால்தான் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி பிரிந்தது. தி.மு.க., அமோக வெற்றி பெற்றது. அந்நிலை வரும் சட்டசபை தேர்தலில் நிகழக்கூடாது. இதற்கு, அ.தி.மு.க., கூட்டணியை விரும்பும் பா.ஜ., மாநில தலைவர்கள் முன்வர வேண்டும்.
ஓட்டு சதவீதம் இருந்தால் மட்டும் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றுவிட முடியாது. கூட்டணி கட்சிகளுக்கிடையே ஒருமித்த கருத்து இருந்தால்தான் குழிபறிக்கும் வேலை நடக்காது. அப்போதுதான் தி.மு.க.,வை வீழ்த்தி, அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்!
புதிய வரலாறு படைக்கலாமே!
வெ.சீனிவாசன்,
திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அ.தி.மு.க., -
பா.ஜ., கூட்டணி, தி.மு.க., தலைமையிடம் அச்சத்தை ஏற்படுத்தி இருந்த
நிலையில், மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்கு கிடைத்த வரவேற்பு, இன்னும்
கலக்கம்அடைய செய்துள்ளது.
அதனால், அந்த இணைப்பை துண்டிக்க பல
உள்குத்து வேலைகளை அரங்கேற்றி வருகிறது. அவ்வகையில், அமித் ஷா கூறிய,
'கூட்டணி ஆட்சி' என்ற வார்த்தையை பிடித்துக் கொண்டு, தங்கள் ஆதரவு
தொலைக்காட்சிகளில் தினமும் விவாதித்து, விரிசலை ஏற்படுத்த முயன்று
வருகின்றனர்.
அ.தி.மு.க., - -பா.ஜ., இரு கட்சிகளுக்குமே
தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதே நோக்கம் எனும் போது,
சின்னச் சின்ன விஷயங்களை பெரிதுபடுத்தாமல், இணைந்து செயல்பட்டால் தான்
தி.மு.க.,வை தோற்கடிக்க முடியும். தேர்தலில் வென்ற பின் மற்றவைகளை அப்போதைய
சூழ்நிலைக்கேற்ப பேசி முடிவு செய்யலாம்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடந்த வரலாறு கிடையாது என்கின்றனர் சிலர்... ஏன் புதிய வரலாறு படைக்கக் கூடாது?
அதேபோன்று,
பா.ம.க., - தே.மு.தி.க., கட்சிகளை, தேசிய ஜனநாயக கூட்டணிக்குள்
செல்லவிடாமல் தடுக்க, அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது, தி.மு.க.,!
அது எந்த அளவுக்கு வெற்றியை தரும் என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்து விடும்.
இந்நிலையில்,
முதல் முறையாக தேர்தல் களம் காணவிருக்கும் த.வெ.க., தலைவர் நடிகர் விஜய்,
'சினிமா ரசிகர்கள் அனைவரும் நமக்கு ஓட்டுப் போடுவர். நாமே அடுத்த
முதல்வர்' என்று நினைத்து தனித்து நின்றால், அது அவருக்கு வெற்றியை தராது.
மாறாக, தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகளை சிதறடித்து, அக்கட்சியின் வெற்றிக்கு
மறைமுகமாக உதவியது போல் ஆகிவிடும். இது, விஜய்க்கு அரசியலில் பெரும்
பின்னடைவையே ஏற்படுத்தும்.
எனவே, தி.மு.க.,வை எதிர்ப்போர் ஓரணியில் நின்று களம் காண வேண்டியது அவசியம்.
மண்,
இனம், மொழி, மானம், ஈ.வெ.ரா., அண்ணாதுரை, சிறுபான்மையினர் பாதுகாப்பு,
மத்திய அரசு வஞ்சிக்கிறது, மாநில சுயாட்சி போன்ற வார்த்தைகளை தி.மு.க.,
அடிக்கடி பேசினால், அக்கட்சி சிக்கலில் உள்ளது என்று அர்த்தம். அதிலிருந்து
வெளியே வருவதற்கு தான் இத்தகைய அஸ்திரங்களை பிரயோகிப்பர்.
இம்முறையும்
அவற்றை அடிக்கடி கூறி வருகின்றனர். அந்த அஸ்திரங்கள் தி.மு.க.,வை
கரைசேர்க்குமா அல்லது அலைகளுக்குள் அகப்பட்ட துரும்பாக தத்தளிக்க வைக்குமா
என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
களங்கம் கற்பிக்க வேண்டாம்!
எம்.ஆர்.ஜெயச்சந்திரன்,
திண்டுக்கல்லில் இருந்து அனுப்பிய, 'இ- - மெயில்' கடிதம்: திருப்புவனம்
மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளி, 'லாக்கப்' மரணத்திற்கு பின், 'காவல்
துறை' என்ற சொல்லைக் கேட்டாலே அலர்ஜியாக உள்ளது.
இதில், 'காவல் துறை உங்கள் நண்பன்' என்ற வாசகம் வேறு!
அதுசரி...
இப்போதெல்லாம் மது மயக்கத்தில் நண்பர்களை கொலை செய்யும் நிகழ்வுகளை
பத்திரிகை செய்திகளில் படித்துக் கொண்டு தானே இருக்கிறோம். அதன்படி, காவல்
துறை ஒரு கொலைகார நண்பர் என்றால் மிகப்பொருத்தமே!
இதுபோன்ற வீர
சாகசத்தை, பாலியல் வழக்கில் கைது செய்யப்படுவோரிடமும், கஞ்சா, ஊழல்
பேர்வழிகளிடமும் காட்டியிருந்தால், சற்று ஆறுதலாக இருந்திருக்கும்.
ஒரு சாதாரண திருட்டு வழக்கு... அதற்கு இவ்வளவு கடுமை காட்ட வேண்டுமா?
'காவல் துறை உங்கள் நண்பன்' என்ற சொல்லுக்கு இனியும் களங்கம் கற்பிக்க வேண்டாம்!