/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சமைக்காததால் திட்டிய கணவர் பெண் போலீஸ் தற்கொலை
/
சமைக்காததால் திட்டிய கணவர் பெண் போலீஸ் தற்கொலை
ADDED : ஜன 01, 2024 01:40 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் ராஜ்குமார், 34; இவரது மனைவி ரோஜா, 32. திருவள்ளூர் மகளிர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்தார்.
கடந்த 2015ல் காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு, 8, 6 வயதில் மகன், மகள் உள்ளனர். திருவள்ளூர் போலீஸ் குடியிருப்பில் வசித்தனர்.
நேற்று முன்தினம் இரவு பணி முடித்து வீட்டிற்கு வந்த ராஜ்குமார், சமையல் செய்யும்படி மனைவியிடம் கூறியுள்ளார்.
'காலையில் பணிக்கு செல்ல வேண்டியிருப்பதால், ஹோட்டலில் வாங்கி சாப்பிடலாம்' என ரோஜா கூறியுள்ளார்.
இதில் தம்பதிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, ரோஜா படுக்கை அறைக்குச் சென்று கதவை பூட்டிக் கொண்டுள்ளார். சிறிது நேரம் கழித்து ராஜ்குமார் கதவை திறக்க முயன்றுள்ளார்.
எவ்வித சத்தமும் இல்லாததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது, ரோஜா மின்விசிறியில் துாக்கில் தொங்கியுள்ளார்.
ராஜ்குமார் அவரை மீட்டு, '108' ஆம்புலன்சில் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்த போது, ரோஜா ஏற்கனவே இறந்தது தெரிந்தது.
இதுகுறித்து, ரோஜாவின் தந்தை கணேசன் அளித்த புகாரின்படி, திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.