/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதை கும்பல், ரவுடிகள் ஆதரவாளர்களுக்கு பதவி அ.தி.மு.க., தலைமை மீது தொண்டர்கள் அதிருப்தி
/
போதை கும்பல், ரவுடிகள் ஆதரவாளர்களுக்கு பதவி அ.தி.மு.க., தலைமை மீது தொண்டர்கள் அதிருப்தி
போதை கும்பல், ரவுடிகள் ஆதரவாளர்களுக்கு பதவி அ.தி.மு.க., தலைமை மீது தொண்டர்கள் அதிருப்தி
போதை கும்பல், ரவுடிகள் ஆதரவாளர்களுக்கு பதவி அ.தி.மு.க., தலைமை மீது தொண்டர்கள் அதிருப்தி
ADDED : அக் 27, 2025 02:57 AM
போதை பொருள் விற்கும் கும்பலுடன் தொடர்புள்ளவர்கள், பிரபல ரவுடிகளின் ஆதரவாளர்களை எல்லாம் அ.தி.மு.க., நிர்வாகிகளாக நியமித்ததால், தலைமை மீது தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அடுத்தாண்டு சட்டசபை தேர்தலில், சென்னையில் உள்ள சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் மாவட்ட, பகுதி, வட்டங்களுக்கு புதிய நிர்வாகிகளை, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி நியமித்து வருகிறார்.
இந்த நியமனத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது, போதை பொருள் விற்கும் கும்பலுடன் தொடர்பு உள்ளவர்களுக்கும், பிரபல ரவுடிகளின் ஆதரவாளர்களுக்கும் பதவிகள் வழங்கப்பட்டு உள்ளதாகவும், பின்னணியில் தலைமைக்கு நெருக்கமான மாவட்ட நிர்வாகிகள் சிலர் இருப்பதாகவும் தொண்டர்கள் குமுறுகின்றனர்.
இதுகுறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
ஒவ்வொரு மாவட்ட செயலர்களுக்கும் தலா இரண்டு சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடந்த சட்டசபை தேர்தலில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில், ஒரு சட்டசபை தொகுதியில் கூட அ.தி.மு.க., வெற்றி பெறவில்லை. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தொகுதியில் தான் அ.தி.மு.க., வெற்றி பெற்றது.
கட்சியின் நிலைப்பாடு இப்படி இருக்கும் நிலையில், சென்னையில் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளில் குற்றப்பின்னணி உள்ளவர்கள் இடம் பெற்றிருப்பதால், வரும் சட்டசபை தேர்தலில் அ.திமு.க., வுக்கு பின்னடைவு ஏற்படும்.
வடசென்னை மாவட்டத்தில், வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகமாக வசிக்கும் துறைமுகம் பகுதியில், முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த இருவருக்கு பகுதி நிர்வாகிகளாக பதவி தரப்பட்டுள்ளது. எப்படி வடமாநிலத்தவர் ஓட்டுக்களை கவர முடியும்.
தன் பெட்ரோல் பங்க்கிற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது என்றதும், சென்னையை சேர்ந்த ஆளுங்கட்சி அமைச்சரை சந்தித்து உதவி கேட்டவருக்கு, கட்சியில் பதவி தரப்பட்டுள்ளது.
எழும்பூர் பகுதியில் உள்ள ஒரு வட்ட நிர்வாகி, கஞ்சா வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டவர்.
வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்களுக்கு வட்ட செயலர் பதவியும், பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை எனக் கூறி, மீண்டும் கூட்டணி வைத்த பழனிசாமியை மக்கள் எப்படி நம்புவர் எனக் கேள்வி கேட்டவருக்கு, மாவட்ட மாணவர் அணி நிர்வாகி பதவி தரப்பட்டுள்ளது.
தமிழக பகுஜன் கட்சி முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வரும், வடசென்னை மாவட்டத்தை சேர்ந்த முக்கிய குற்றவாளியின் ஆதரவாளருக்கு, வட்ட செயலர் பதவி கிடைத்துள்ளது.
தென்சென்னையின் பிரபல ரவுடி ஒருவரின் ஆதரவாளருக்கு, இளைஞரணி மாவட்ட செயலர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
தென் சென்னையில் ஒருவருக்கு மாவட்ட இளைஞரணி பதவியும், மற்றொரு மாவட்டத்தில் ஜெயலலிதா பேரவை செயலர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
மயிலாப்பூரில் போலி பத்திரம் தயாரித்த குற்றத்தில் ஈடுபட்டவருக்கு, வர்த்தக அணியில் பகுதி நிர்வாகி பதவியும் கிடைத்துள்ளது.
தி.நகரில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்புடையவருக்கு, ஜெயலலிதா பேரவையில் பதவி தரப்பட்டுள்ளது.
சமீபத்தில், ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு பழனிசாமி காரில் வந்தபோது, பதவி பறிக்கப்பட்ட வட்ட செயலர் ஒருவர் புகார் மனுவை நீட்டினார்.
காரை நிறுத்தி அம்மனுவை பழனிசாமி வாங்கி படித்து விட்டு, விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளார். இதனால், பணி நியமன குளறுபடிக்கு விரைவில் தீர்வு ஏற்படும் என நம்புகிறோம்.
அதோடு, குளறுபடிக்கு உடந்தையாக இருந்த மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின
- நமது நிருபர் - .

