பட்டறையில் கொள்ளை: 'பலே' திட்டம் தீட்டிய தி.மு.க., நிர்வாகி கைது
பட்டறையில் கொள்ளை: 'பலே' திட்டம் தீட்டிய தி.மு.க., நிர்வாகி கைது
ADDED : ஜூலை 06, 2026 02:48 AM

சென்னை: சவுகார்பேட்டை, மின்ட் தெருவில் பி.எஸ்., மெல்ட்டிங் அண்ட் டெஸ்டிங் எனும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை உருக்கும் பட்டறையில் இம்மாதம் 1ம் தேதி 1.4 கிலோ தங்க கட்டி கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த கொள்ளையில் ஈடுபட்ட ஆறுமுகம், லோகேஷ், ரமணா, முகமது சமீர், ஆகியோரை, யானைகவுனி போலீசார் ஏற்கனவே கைது செய்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த யானைக்கவுனி, கல்யாணபுரத்தைச் சேர்ந்த அஜித்குமார், 26, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
போலீசார் விசாரணையில், அஜித்குமார், தங்க கட்டிகளை கொள்ளையடிக்க சதித்திட்டம் போட்டு, மூளையாக செயல்பட்டவர் என்பதும், தி.மு.க.,வின் விளையாட்டு மேம்பாட்டு அணியின் பகுதி துணை அமைப்பாளர் என்பதும் தெரியவந்தது.
மேலும் ஓட்ட பந்தயங்களில் பங்கேற்று, பல பதக்கங்களை வென்றவர் என்பதும், குறுகிய காலத்தில், பணம் சம்பாதிக்க இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிந்தது.
போலீசார் அவரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
