/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உலக இதய தினம் ஸ்டான்லியில் அனுசரிப்பு
/
உலக இதய தினம் ஸ்டான்லியில் அனுசரிப்பு
ADDED : அக் 01, 2024 12:13 AM

ராயபுரம்,உலக இதய தினம், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் விழிப்புணர்வு பேரணியை, ராயபுரம் எம்.எல்.ஏ., ஐட்ரீம் மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதய துறை சார்பில் நடந்த கண்காட்சியில், இதய நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படுத்தப்படும் பல்வேறு உபகரணங்கள், பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டன.
பொதுமக்களுக்கு இதய நோய் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், இதய நோய்களை தடுப்பதற்கான உணவுமுறைகள் அடங்கிய கையேடு வெளியிடப்பட்டது.
மேலும், ஏ.எஸ்.டி., எனும் பிறவி இதய குறைபாடால் பாதிக்கப்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தற்போது நலமுடன் வாழும் இரண்டு பெண் நோயாளிகள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வில் அவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
இது குறித்து ஸ்டான்லி மருத்துவ கல்லுாரி முதல்வர் பாலாஜி கூறுகையில், இந்தியாவில் மட்டும் ஆண்டிற்கு 30 லட்சம் பேர் இதய நோய் பாதிப்பால் உயிரிழக்கின்றனர்.
இது உலகளவில் ஏற்படும் உயிரிழப்புகளில் 5ல் ஒன்றாகும். தொற்றா நோய்களால் ஏற்படும் மொத்த உயிரிழப்புகளில், 60 சதவீதம் இதய நோய் பாதிப்பால் மட்டுமே ஏற்படுகின்றன.
ஆரோக்கியமான உணவு, சீரான உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்,'' என்றார்.