UPDATED : ஜூன் 21, 2026 05:16 PM
ADDED : ஜூன் 21, 2026 05:10 PM

சென்னை:“நம் பணியை சிறப்பாக செய்வதே, நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படை,” என, சிலம்பம் உலக சாதனை நிகழ்ச்சியை துவக்கி வைத்த, உயர் நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி தெரிவித்தார்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரத்தை தலைமையிடமாகக் கொண்ட 'மஹாயோகம் - மஹாமகரிஷி' அறக்கட்டளை மற்றும் 'ஜென்ஸ்கர் குணப்படுத்தும் தற்காப்புக் கலை' அமைப்பு இணைந்து, 'யோஜென் சிலம்பம் கட்டா' என்ற உலக சாதனை நிகழ்ச்சியை சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று முன்தினம் நடத்தின.
நிகழ்ச்சியை துவக்கி வைத்து, உயர் நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி பேசுகையில், ''நாம் மேற்கொள்ளும் பணியை சிறப்பாக செய்வோரால்தான் உலகமும் நாடும் செயல்படுகிறது. குழந்தைகளை அவர்களின் விருப்பத்திற்கேற்ப, நல்ல செயல்களில் வழிநடத்த வேண்டும்,'' என்றார்.
நிகழ்ச்சியில், தமிழகம் முழுதும் இருந்து வந்த 1,000க்கும் மேற்பட்டோர், ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக சிலம்பம் பயிற்சி செய்து, உலக சாதனை நிகழ்த்தினர். இந்த சாதனை ,'சாம்பியன் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்' அமைப்பால் பதிவு செய்யப்பட்டது.
