தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/'எழுத்து தான் எனக்கு எல்லாம்'

'எழுத்து தான் எனக்கு எல்லாம்'

'எழுத்து தான் எனக்கு எல்லாம்'


ADDED : ஜன 11, 2024 01:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 11, 2024 01:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திரைப்பட இயக்குனர், வசனகர்த்தா, பாடலாசிரியர், கவிஞர், தன்னம்பிக்கை பேச்சாளர் எனும் பன்முகம் கொண்டவர் பிருந்தாசாரதி. அவரிடம் பேசியதில் இருந்து...

வாசிப்பை நேசித்தது எப்போது?


பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த போது, கும்பகோணத்தில் உள்ள சிவகுருநாதன் நுாலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு யாரோ படித்து விட்டு, மேசை மீது விரித்தே விட்டுச் சென்ற புத்தகத்தை படித்தேன். 'நான் இருக்கிறேன்' என்ற ஜெயகாந்தனின் சிறுகதை அது.

அந்த எழுத்தும் கதையும் என்னை வசீகரித்தன. தொடர்ந்து நுாலகம் செல்லத் துவங்கினேன். சாகித்ய அகாடமி தொகுத்த 'ஜெயகாந்தன் சிறுகதைகள்' நுாலை மூன்று நாட்களில் வாசித்தேன். என் தேடல் பற்றி அறிந்த நுாலகர், எனக்கு நல்ல நுால்களை அறிமுகம் செய்தார்.

10ம் வகுப்பு படித்த போது, ஊர் விசேஷங்களின் போது, சினிமா கதை வசனங்களை ஒலிபரப்புவர். அப்படி எனக்கு திருவிளையாடல், சரஸ்வதி சபதம், மனோகரா, பராசக்தி, வீரபாண்டிய கட்டபொம்மன்' உள்ளிட்ட படங்களின் வசனங்கள் மனப்பாடமாகின.

அப்போது வெளியான 'புதுப்புது அர்த்தங்கள், பாலைவன ரோஜாக்கள்' உள்ளிட்ட படங்களின் காட்சிகளும், வசனங்களும் சிலிர்ப்பை ஏற்படுத்தின. புத்தக வாசிப்பும், திரைப்பட தரிசிப்பும் அப்படித்தான் அறிமுகமாயின.

நீங்கள் வாசித்த ஆரம்பகால எழுத்தாளர்கள் பற்றி?


கண்ணதாசன், வண்ணதாசன் எழுத்துகளுடன் சுத்தரராமசாமியின் ஜெ.ஜெ.சில குறிப்புகள் நுால் என்னை வசீகரித்தது. எம்.வி.வெங்கட்ராமன் எங்கள் ஊர்க்காரர் என்பதால், 'காதுகள்' நாவலை கையெழுத்து பிரதியாகவே படித்தேன். கரிச்சான்குஞ்சு, ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்த 'இந்திய தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்' எனும் நுாலை, அவர் சொல்லச் சொல்ல எழுதும் வாய்ப்பு கிடைத்தது.

அதேபோல், தி.ஜானகிராமனின் 'அம்மா வந்தாள், மோகமுள்' உள்ளிட்டவற்றுடன், பாலகுமாரனின் 'மெர்க்குரி பூக்கள், இரும்புக்குதிரைகள்' உள்ளிட்டவற்றையும் வாசித்தேன். மாலன், பிரபஞ்சன், சுஜாதா, தேனுகா, தஞ்சை பிரகாஷ் உள்ளிட்டோரின் எழுத்துகளையும் தொடர்ந்து வாசித்தேன்.

திரைத்துறை பிரவேசம் எப்படி?


என் உறவினர் வழிகாட்டுதலால், பி.எஸ்., இயற்பியல் படித்தேன். அது என்னை கவராததால், எம்.ஏ., தமிழ் படித்ததும், இயக்குனராகும் கனவுடன் சென்னை வந்தேன். 'பேசும்படம், பிலிமாலயா' இதழ்களுக்காக திரைக்கலைஞர்களிடம் பேட்டி எடுத்து எழுதினேன்.

நடிகர் நாசர் அப்படித்தான் பழக்கமானார். அவர் அவதாரம் என்ற படத்தை இயக்கினார். அவரிடம் உதவி இயக்குனராக சேர்ந்து, 'தேவதை'யிலும் பணியாற்றினேன்.

என்னுடன் அறை நண்பராக இருந்த லிங்குசாமி, 'ஆனந்தம்' திரைப்படத்தை இயக்க, அதில் வசனம் எழுதினேன். தொடர்ந்து அவரின் பையா, வேட்டை, தி வாரியர், சண்டக்கோழி 2 ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதினேன். இதற்கிடையில், ஜேடி ஜெர்ரி, வைரமுத்து இயக்கிய தொலைக்காட்சி தொடர்களில் உதவி இயக்குனராக பணியாற்றினேன்.

இயக்குனரானது பற்றி?


சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜீவா நடிக்க, தித்திக்குதே திரைப்படத்தை இயக்கினேன். சில பட வாய்ப்புகள் வந்து சென்றன. தற்போது ஜீவா, மாதவன் நடக்கும் படங்களை இயக்க உள்ளேன். இயக்குனர் பாலாவின் வணங்கான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளேன்.

சினிமாவில் கால் வைத்துக்கொண்டே கவிதைகளில் கை வைக்கிறீர்களே?


எழுத்து தான் எனக்கு எல்லாம். சினிமா என் பிழைப்புக்கான வழி. அதில், நான் வசனகர்த்தா மட்டுமே. ஆனால், நான் எழுதும் கவிதைகள் எனக்கானவை. சமூகம் சார்ந்த என் உணர்ச்சியில் பிறப்பவை.

இதுவரை, 'நடைவண்டி, ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம், எண்ணும் எழுத்தும், இருளும் ஒளியும், பச்சையம் என்பது பச்சை ரத்தம், மீன்கள் உறங்கும் குளம், பாஷோ என் பக்கத்து வீட்டுக்காரர், முக்கோண மனிதன், காட்டுக்கு புலிகள் நாட்டுக்கு கவிஞர்கள்' ஆகிய கவிதை நுால்களை எழுதி உள்ளேன். 'வசனம்' உள்ளிட்ட மூன்று நுால்கள் அச்சில் உள்ளன. புதிய படங்களுக்கும் வசனம் எழுதி வருகிறேன்.- - நமது நிருபர் - -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us