ஆட்டோ ஓட்டுநரின் இறப்பிற்கு காரணமான வாலிபர் சிக்கினார்
ஆட்டோ ஓட்டுநரின் இறப்பிற்கு காரணமான வாலிபர் சிக்கினார்
ADDED : மார் 18, 2026 05:55 AM

வடபழனி: வடபழனி அருகே, அதிவேகமாக கார் ஓட்டி, ஆட்டோ ஓட்டுநரின் உயிரிழப்பிற்கு காரணமான வாலிபர் சிக்கினார்.
வடபழனி, நெற்குன்றம் சாலையில், கடந்த 14ம் தேதி ஆட்டோ ஒன்றின் மீது, அதிவேகமாக வந்த கார் மோதியது. விபத்து ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்றது.
இதில், பலத்த காயமடைந்த ஆட்டோ ஓட்டுநரான சாலிகிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர், 58, என்பவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து, பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்தனர்.
இதில், காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது சாலிகிராமத்தைச் சேர்ந்த நிஷாந்த், 29, என்பது தெரியவந்தது. போலீசார் அவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
விசாரணையில், தன் நண்பர்களை உற்சாகப்படுத்துவதற்காக, சாலையில் அதிவேகமாக காரை ஓட்டியபோது, கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதியது தெரியவந்தது.
