ADDED : ஜூன் 05, 2026 06:40 PM
கோவை: மாவட்டத்தில் 1,401 ரேஷன் கடைகள் வாயிலாக 4.18 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் வினியோகிக்கப்படுகின்றன. இதில், பொருட்கள் பெறாத அட்டைகள் 10,517 உள்ளன. மாவட்டத்தில் 12 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.
கடந்த டிச., 15ம் தேதி வரை புதிய ரேஷன் கார்டு கோரி, பெறப்பட்ட விண்ணப்பங்களில் 16,752 பரிசீலனை செய்யப்பட்டு, பயனாளிகளுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் அரிசி குடும்ப அட்டைகளே அதிகம். புதிதாக ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்தவர்கள் மற்றும் பெயர் சேர்த்தல், நீக்கம் தொடர்பாக விண்ணப்பித்தவர்களின் மனுக்கள், இன்னும் சரிபார்க்கப்படாமல் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘டிச., வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. புதிய ரேஷன் கார்டு கேட்டு வாரத்துக்கு 1,000 விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. ஓரிரு வாரங்களில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்றார்.
