/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்வெட்டு வருகைக்காக காத்திருக்கும் நிழற்கூரை
/
கல்வெட்டு வருகைக்காக காத்திருக்கும் நிழற்கூரை
ADDED : ஆக 09, 2024 12:39 AM

வால்பாறை;வால்பாறை நகராட்சி அலுவலகம் முன், பல ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருந்த நிழற்கூரை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், அலுவலக விரிவாக்கத்தின் போது இடிக்கப்பட்டது.
இதனால், பஸ்சிற்காக காத்திருக்கும் பயணியர், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். நகராட்சி அலுவலகத்தின் முன், பொதுமக்கள் நலன் கருதி பயணியர் நிழற்கூரை கட்ட வேண்டும் என்று, வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்கள் கோரிக்கை விடுத்தன.
அதன் அடிப்படையில், நகராட்சி அலவலகத்தின் முன், 9.80லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பயணியர் நிழற்கூரை கட்டி முடிக்கப்பட்டு, இரண்டு மாதத்திற்கு மேலாகியும் திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது.
நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளியிடம் கேட்ட போது, ''பயணியர் நிழற்கூரை முன்பாக கல்வெட்டு வைக்க வேண்டும். கல்வெட்டு பணி தாமதமாவதாலும், நிழற்கூரையை சுற்றிலும் தடுப்பு கம்பி கட்ட வேண்டியுள்ளதாலும் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும்,'' என்றார்.