/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை தொகுதி தேர்தல் முடிவு எத்தனை மணிக்கு தெரிய வரும்?
/
கோவை தொகுதி தேர்தல் முடிவு எத்தனை மணிக்கு தெரிய வரும்?
கோவை தொகுதி தேர்தல் முடிவு எத்தனை மணிக்கு தெரிய வரும்?
கோவை தொகுதி தேர்தல் முடிவு எத்தனை மணிக்கு தெரிய வரும்?
ADDED : மே 03, 2024 11:45 PM
கோவை:கோவை லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டுகள், மூன்று சட்டசபை தொகுதிகளில் தலா, 24 சுற்றுகள் எண்ணப்படும் என்பதால், தேர்தல் முடிவறிய, இரவாகி விடும். சுற்றுக்கு சுற்று அரசியல் கட்சியினர் மத்தியில் பரபரப்பு கூடும் என்பதால், கூடுதல் பாதுகாப்பு அளிக்க, காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டுகள், ஜூன் 4ல் ஜி.சி.டி., கல்லுாரியில் எண்ணப்படுகின்றன.
கோவை தெற்கு, வடக்கு, கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிகளுக்கு, 14 டேபிள்கள், பல்லடம் தொகுதிக்கு 18, கவுண்டம்பாளையம் தொகுதிக்கு, 20 டேபிள்கள் போடப்பட்டுள்ளன. ஒவ்வொரு டேபிளிலும் ஓட்டு எண்ணிக்கை கண்காணிப்பாளர், ஒரு உதவியாளர், ஒரு மைக்ரோ அப்சர்வர் பணியில் இருப்பர்.
பல்லடம், சூலுார் மற்றும் சிங்காநல்லுார் ஆகிய மூன்று தொகுதிகளில், தலா, 24 சுற்றுகள் ஓட்டுகள் எண்ணப்படும். கவுண்டம்பாளையம் மற்றும் கோவை வடக்கு தொகுதியில் தலா, 22 சுற்றுகள் எண்ணப்படும். கோவை தெற்கு தொகுதி சிறியது என்பதால், 18 சுற்றுகளில் எண்ணப்பட்டு விடும்.
இதுகுறித்து, தேர்தல் பிரிவினர் கூறியதாவது:
ஓட்டு எண்ணிக்கைக்கான பணிகள், வேகமாக நடந்து வருகின்றன. எத்தனை ஊழியர்கள் தேவை என பட்டியலிடப்பட்டு உள்ளது. அவர்களுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு சுற்றாக எண்ணி முடித்ததும், தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் பதிவேற்றப்படும். 37 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளதால், தேர்தல் முடிவுகள் முழுமையாக அறிவதற்கு இரவாகி விடும்.
தபால் ஓட்டு எண்ணுவதற்கு, ஆறு மேஜைகள் போடப்படும். தபால் ஓட்டுகளின் கவர்களை 'கட்' செய்வது; படிவங்களை சரிபார்த்து; கையெழுத்து இருக்கிறதா என ஆய்வு செய்வது; ஓட்டு செல்லத்தக்கதா என முடிவெடுத்து, 500 ஓட்டுகள் சேர்த்து, ஒரு பண்டல் போடப்படும்.
வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் எண்ணப்படும். தபால் ஓட்டுகள் எண்ணுவதற்கு மட்டும் ஐந்து மணி நேரம் தேவைப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.