/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்காக சட்ட போராட்டம் நடத்திய விவசாயி!
/
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்காக சட்ட போராட்டம் நடத்திய விவசாயி!
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்காக சட்ட போராட்டம் நடத்திய விவசாயி!
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்காக சட்ட போராட்டம் நடத்திய விவசாயி!
ADDED : ஆக 20, 2024 11:57 PM

அன்னுார்;'கொங்கு மண்டல மக்களின் 60 ஆண்டு கனவான அத்திக்கடவு-அவினாசி திட்டம் நிறைவேற, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, சட்டப் போராட்டம் நடத்தியவர் விவசாயி ஓதிச்சாமி' என்கின்றனர் திட்ட ஆர்வலர்கள்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், உள்ள குளம், குட்டைகளில் நீர் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்றக் கோரி அத்திக்கடவு அவிநாசி திட்ட போராட்ட குழு பல்வேறு போராட்டங்களை நடத்தியது.
எனினும் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை. இதையடுத்து, அன்னுார் அருகே உள்ள ஆம்போதியைச் சேர்ந்த விவசாயியும், சமூக ஆர்வலருமான ஓதிச்சாமி, 2014ல் பொதுப்பணித்துறைக்கு அனுப்பிய மனுவில், 'பவானி ஆற்றின் உபரி நீரை பயன்படுத்தி, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் குளம் குட்டைகளை நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்' என தெரிவித்திருந்தார்.
எனினும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் 2014ம் ஆண்டு பிப்.,யில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் மகாதேவன், 'மனுதாரரின் கோரிக்கைக்கு உரிய பதிலளிக்கும்படி, மத்திய அரசின் நிதித்துறை செயலர், நீர்வளத்துறை செயலர், தமிழக அரசின் நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை செயலர்கள் மற்றும் கலெக்டர்களுக்கு, நோட்டீஸ் அனுப்பினர்.
இதைத்தொடர்ந்து, 2015 ஜூலையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் விசாரித்து, 'மூன்று மாதங்களுக்குள் இத்திட்டத்தின் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.
தமிழக அரசின் பொதுப்பணித்துறை அளித்த பதில் மனுவில், 'மேலும் இரண்டு மாதங்கள் அவகாசம் அளிக்க வேண்டும். அதற்குள் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய நீர் வள ஆணையத்துக்கு அனுப்புகிறோம்' என உறுதி அளித்தனர்.
இதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், 'பொதுப்பணித்துறை கேட்ட கால அவகாசத்துக்குள், திட்ட பணிகளை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அபராதம் விதிக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அத்திக்கடவு - அவினாசி திட்டம் நிறைவேற்றுவது குறித்து தமிழக அரசு விரிவான திட்ட அறிக்கை தயாரித்தது. 2018ல் டெண்டர் விடப்பட்டது. 2019 பிப்ரவரியில் பணிகள் துவங்கின. கடந்த 17ம் தேதி, முதல்வர் ஸ்டாலினால் திட்டம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அத்திக்கடவு ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், 'சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்து நான்கு ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்தி, அரசுக்கு தொடர்ந்து மனு அனுப்பி, இத்திட்ட பணிகள் துவங்குவதற்கும், நிறைவேறுவதற்கும் விவசாயி ஓதிச்சாமி முக்கிய பங்காற்றி உள்ளார்.
அவர் நான்கு ஆண்டுகளுக்கு முன், உடல்நலக்குறைவால் காலமாகி விட்டார். எனினும் அவருடைய முயற்சிக்காக, அவரது குடும்பத்தாருக்கு, எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கொங்கு மண்டல மக்களின் கனவு, நனவாகியுள்ள இத்தருணத்தில் நாங்கள் அவரை நினைவு கூர்கிறோம்' என்றனர்.

