ADDED : ஆக 06, 2026 05:40 PM
தகுதியானதை மட்டுமே அடைய வேண்டும் தகுதியில்லாததை ஏற்காமல் தவிர்க்க வேண்டும் என்று சொற்பொழிவில் திருச்சி கல்யாணராமன் பேசினார்.
ராம்நகர் கோதண்டராமர் தேவஸ்தானத்தில் நவக்கிரஹ தோஷம் நீங்க நடத்தும் ஆன்மிக சொற்பொழிவில் காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்வான் திருச்சி ஸ்ரீ கல்யாணராமன் பேசியதாவது:
தசரதனிடம் கைகேயி இரண்டு வரம் கேட்டார். தசரதன் ராமபிரானுக்கு பட்டாபிஷேகம் செய்துவிட்டு தான் கானகம் செல்வதாக தசரதன் சபையில் அனைவர் முன்னிலையிலும் கூறினார்.
தசரதன் தன் மாமனாரையும், ராமபிரானது மாமனாரையும், தனது மனைவியரிடத்திலும் ஆலோசிக்காததால் பிரச்னை பெரிதாகி விஸ்வரூபம் எடுத்தது. நாம் சொல்வதை எப்போதும் எல்லோரும் கேட்பார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது. அரச பதவியை துறக்கிறேன் என்று சொன்னவர் ராமனுக்கு பட்டம் என்று சொன்னவுடன் தான் பிரச்னை ஏற்பட்டது.
கைகேயி இப்படி வரம் கேட்க உனக்கு தகுதி கிடையாது என்று கூறியதும் , வரம் கொடுக்க உங்களுக்கும் தகுதி கிடையாது என்று கூறினார். கூனியின் சூழ்ச்சியும் கைகேயின் வரமும் தோற்றுப்போனது காரணம் ராமன் ஏற்றுக்கொண்டான் பரதன் நிராகரித்தார்.
அதனால் பெரியோர் சொல்வதை கேட்க வேண்டும் என்ற தர்மத்தை ராமர் கடைபிடித்தார். நம் தகுதிக்கு மீறிய எந்த பதவி தேடி வந்தாலும் அதை நிராகரிக்க வேண்டும் என்று பரதன் வாழ்ந்து காட்டினார். அதை மீறினால் அவமானமே மிஞ்சும்.
இதை இந்த காலத்து இளைஞர்கள் கவனித்து பின்பற்ற வேண்டும். இவ்வாறு கல்யாணராமன் கூறினார்.
