மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பணிகள் தீவிரம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பணிகள் தீவிரம்
ADDED : ஜூலை 17, 2026 04:31 PM
பொள்ளாச்சி: இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, நேற்று முதல், வரும், 31ம் தேதி வரை https://se.census.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாக, சுய கணக்கெடுப்பு செய்யப்படுகிறது.
மக்கள் தங்களது குடும்பத்துக்கான பதிவுகளை இணையதளத்தின் வாயிலாக, தாங்களே பதிவு செய்யும் வசதி அரசால் வழங்கப்பட்டுள்ளது. அதில், பொதுமக்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை அக்குடும்ப தலைவரின் மொபைல்போன் எண் வாயிலாக, 33 கேள்விகளை பூர்த்தி செய்து, குடும்பத்தின் சுய கணக்கெடுப்பை பதிவு செய்யலாம்.
அதை தொடர்ந்து, வரும் அக்., 1ம் தேதி முதல், 30ம் தேதி வரை கணக்கெடுப்பாளர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்வர். சுய கணக்கெடுப்பை நிறைவு செய்த பின் கிடைக்கும், 12 இலக்க எண்ணை பொதுமக்கள் பாதுகாப்பாக வைத்திருந்து, கணக்கெடுப்பாளரிடம் வழங்கி விபரங்களை உறுதி செய்து கொள்ள வேண்டும் என, வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சப் – கலெக்டர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. சப் – கலெக்டர் ராமகிருஷ்ணசாமி பேரணியை துவக்கி வைத்தார். தாசில்தார் முருகேசன், தலைமையிடத்து துணை தாசில்தார் பட்டுராஜா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
என்.ஜி.எம்., கல்லுாரி மாணவர்கள் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியானது காந்தி சிலை, தாலுகா அலுவலகம், தபால் அலுவலகம் ரோடு என முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் சப் – கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கேற்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
