குழந்தைகள் கஷ்டப்பட்டு படிக்க வேண்டாம்; இஷ்டப்பட்டு படிங்க
குழந்தைகள் கஷ்டப்பட்டு படிக்க வேண்டாம்; இஷ்டப்பட்டு படிங்க
ADDED : ஆக 10, 2026 05:52 PM
மேட்டுப்பாளையம்: குழந்தைகள் கஷ்டப்பட்டு படிக்க வேண்டாம். இஷ்டப்பட்டு படிக்க வேண்டும், என, தமிழ்த்துறை பேராசிரியர் பர்வீன் சுல்தானா பேசினார்.
மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாள் நடந்த விழாவுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் மகபுநிசா தலைமை வகித்தார். இணைச் செயலாளர் ஜெயராமன் வரவேற்றார். டாக்டர் சுதாகர் முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை பேராசிரியர் பர்வீன் சுல்தானா, வீழ்வேன் என்று நினைத்தாயோ என்ற தலைப்பில் பேசியதாவது:
நீங்கள் எதை அதிகமாக யோசிக்கிறீர்களோ, அது நிகழும் வாய்ப்பு மிக மிக அதிகம். ஒரு விஷயத்திற்கு பயந்து கொண்டே இருந்தால், அது நடந்து விடும். ஆழமாக யோசித்தாலும் அது நடந்து விடும். உங்கள் மனதிற்கு அந்த அளவிற்கு பெரிய ஆற்றல் உண்டு. யாரேனும் உங்களை சிரமப்படுத்தினால், ஒருபோதும் நீங்கள் பதில் சொல்ல வேண்டாம். உங்கள் மவுனத்தால், அவர்களுக்கு விரக்தி கொடுத்து, உங்கள் வெற்றியால், அவர்களுக்கு அதிர்ச்சி கொடுங்கள். இதுவே நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என எதிராளிக்கு சொல்லும் சவால்.
குழந்தைகள் கஷ்டப்பட்டு படிக்க வேண்டாம். கஷ்டப்படாமல் இருக்க, இஷ்டப்பட்டு படிக்க வேண்டும். எனவே இன்று முதல் நீங்கள் படிக்க தொடங்கி விட வேண்டும். உங்கள் வாழ்க்கையில் இன்று இரவு நீங்கள் உறங்கும் முன், உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள், ஏதேனும் ஒரு இலக்கை வைத்து விட்டால், அதை அடைய முயற்சி செய்ய வேண்டும். வெற்றி பெற்றால், அது பொறுப்பாக வேண்டுமே தவிர, கொண்டாட்டமாக இருக்க கூடாது. வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கும் போது, சில பின்னடைவுகள் வரும். அது வருவதற்கு காரணம் என்ன என, யோசிக்க வேண்டும். நாம் அடுத்தவர்களை ஜெயிக்க வேண்டும் என ஓடுகிறோம். அப்படி அல்லாமல் நீங்கள் எதை எல்லாம் சாதித்து உள்ளீர்களோ, அதை எல்லாம் நாளைக்கு வென்று காட்டுங்கள். அதுதான் உங்களுக்கான இலக்கை நோக்கி நகர்வதற்கான வழிமுறைகள். சிறிய சிறிய தவறுகளால் தான் ஒரு மனிதன் வீழ்ந்து போகிறான். யாரும் மலை தடுக்கி விழுவதில்லை. சிறிய கல் தடுக்கி கீழே விழுகிறோம். சிறிய கல் மீது கவனம் செலுத்த வேண்டும். அடுத்து எடுத்து வைக்கும் அடியை கவனிக்கவில்லை என்றால், உங்கள் இலக்கை அடைய வாய்ப்பு இல்லை. இவ்வாறு பர்வீன் பேசினார்.
விழாவில் ஐகோர்ட் வக்கீல் நாதன், டாக்டர் மகேஸ்வரன், சங்கீதா உள்பட பலர் பேசினர். கணேஷ் நன்றி கூறினார்.
