/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை விமான பயணிகளின் எண்ணிக்கை கோவிட்டுக்கு முந்தைய நிலையை எட்ட வாய்ப்பு
/
கோவை விமான பயணிகளின் எண்ணிக்கை கோவிட்டுக்கு முந்தைய நிலையை எட்ட வாய்ப்பு
கோவை விமான பயணிகளின் எண்ணிக்கை கோவிட்டுக்கு முந்தைய நிலையை எட்ட வாய்ப்பு
கோவை விமான பயணிகளின் எண்ணிக்கை கோவிட்டுக்கு முந்தைய நிலையை எட்ட வாய்ப்பு
ADDED : செப் 06, 2024 06:20 AM

கோவை : கூடுதல் விமான சேவை உள்ளிட்ட காரணங்களால், கோவை சர்வதேச விமான நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில் ஆக., மாதத்தில், கோவை விமானநிலைய பயணிகளின் எண்ணிக்கை 22, 678 அதிகரித்துள்ளது. கடந்த ஜூலையில், கோவை விமான நிலையத்தில், 1,701 விமானங்கள்இயக்கப்பட்டுள்ளன. 14 ஆயிரத்து 311 சர்வதேச விமானப் பயணிகள் உட்பட 2 லட்சத்து 56 ஆயிரத்து 673 பயணிகள் கோவை விமான நிலையத்தைப் பயன்படுத்தியுள்ளனர். கடந்த ஆக.,ல் மொத்த விமான சேவைகளின் எண்ணிக்கை 1,639 ஆக குறைந்த போதிலும், மொத்த பயணிகளின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 678 அதிகரித்து, 2 லட்சத்து 79 ஆயிரத்து 351 ஆக இருந்தது.
முந்தைய மாதத்தை விட, ஆக.,ல் 5,440 சர்வதேச பயணிகள்17 ஆயிரத்து 238 உள்நாட்டு பயணிகளின் வருகை அதிகமாக இருந்துள்ளது. இதே காலகட்டத்தில் 160 டன் கூடுதல் சரக்கு கையாளப்பட்டு, மொத்தம் கையாளப்பட்ட சரக்கின் அளவு 1,239 டன்னாக அதிகரித்துள்ளது.
பயணிகள் எண்ணிக்கை, சரக்கின் அளவு அதிகரித்திருப்பதற்கு, கூடுதலாக இயக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை முக்கிய காரணமாக உள்ளது.
இதுதொடர்பாக, விமானப் போக்குவரத்து ஆர்வலர் ஷ்யாம் மோகன் பிரபு கூறியதாவது:
கடந்த ஆக., முதல் அபுதாபிக்கு புதிதாக விமான சேவை துவக்கப்பட்டுள்ளது. மும்பைக்கு உள்நாட்டு விமான சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ நிறுவனம் 186 இருக்கைகள் கொண்ட விமானங்களுக்குப் பதிலாக, 236 இருக்கைகள் கொண்ட விமானங்களை இயக்கத் தொடங்கியுள்ளது.
மேற்கு மண்டலத்தில் தொழில் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. ஆயுர்வேதம், ஆன்மிகம் உள்ளிட்ட சுற்றுலாவுக்கு வருவோரின் எண்ணிக்கை, கோவை சுற்றுப்பகுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு உயர் கல்விக்காக செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது உள்ளிட்டவற்றால் விமான பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு, 2018—19ம் நிதியாண்டில், கோவை விமான நிலைய பயணிகளின் எண்ணிக்கை 30 லட்சமாக இருந்தது. இது கடந்த நிதியாண்டில் 29 லட்சத்தைத் தொட்டது. நடப்பு நிதியாண்டில், 30 லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் என்ற, கோவை தொழில்அமைப்புகளின் கோரிக்கை வலுத்துள்ளது.