ADDED : ஜூலை 19, 2026 02:40 PM
பொள்ளாச்சி: அஞ்சல் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, தனிப்பயன் காசோலை புத்தகத்துக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம், என, அஞ்சல கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
பொள்ளாச்சி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் சாந்தினிபேகம் அறிக்கை:
அஞ்சல் துறை அஞ்சல் சேமிப்பு கணக்கு வைத்து இருப்பவர்களுக்காக, புதிய தனிப்பயன் காசோலை புத்தகம் வசதி கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய காசோலை புத்தகத்தில் கணக்குதாரரின் பெயர், கணக்கு எண் மற்றும் அஞ்சல் துறையின், IFSC குறியீடு முன்கூட்டியே அச்சிடப்பட்டு இருக்கும்.
இதன் வாயிலாக, பாதுகாப்பு அதிகரிப்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு வங்கி தரத்திலான சேவை கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பப்படி உடனடி காசோலை புத்தகம் அல்லது தனிப்பயன் காசோலை புத்தகம் என இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யலாம்.
தனிப்பயன் காசோலை புத்தகம் இலவசமாக கணக்குதாரரின் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு அஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்கப்படும்.
ஆரம்ப கட்டத்தில், இந்த சேவையை அஞ்சலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கும் வசதி வழங்கப்படும். மேலும், விபரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
