/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரத்து குறைந்துள்ளதால் வெண்டை விலை உயர்வு
/
வரத்து குறைந்துள்ளதால் வெண்டை விலை உயர்வு
ADDED : மே 29, 2024 11:56 PM
உடுமலை: வரத்து குறைந்துள்ளதால், வெண்டை விலை சந்தையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
உடுமலை கண்ணமநாயக்கனுார், கணக்கம்பாளையம், ஆண்டியகவுண்டனுார், குட்டியகவுண்டனுார், பெரிசனம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெண்டை பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வந்தது.
கிணற்று பாசனத்துக்கு, சீசனை திட்டமிட்டு, இந்த சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் வெண்டைக்காய் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளாவுக்கும் விற்பனைக்காகவும் கொண்டு செல்லப்படுகிறது.
இந்தாண்டு, நிலத்தடி நீர் மட்டம் சரிவால், வெண்டை குறைந்த பரப்பளவிலேயே சாகுபடியானது. அதிலும், கோடை மழை, அதிக வெயில் காரணமாக நோய்த்தாக்குதல் காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இதனால், சந்தைக்கு வரத்து குறைந்து, வெண்டைக்காய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, உடுமலை உழவர் சந்தையில், வெண்டை கிலோ, 45 - 50 ரூபாய் வரை விலை கிடைத்தது.
விவசாயிகள் கூறியதாவது:
பண்டிகை மற்றும் முகூர்த்த சீசனில், வெண்டைக்கு நல்ல விலை கிடைக்கும். ஏக்கருக்கு, 12 டன் வரை மகசூல் கிடைக்கும் வாய்ப்புள்ளது. காய் பறிப்புக்கு போதிய ஆட்கள் கிடைப்பதில்லை. இந்த சீசனில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.