தேங்காய் சிரட்டை டன் ரூ.34,500க்கு வேகமாக உயருது! விற்பனை வரத்து இல்லாததால் விலை மேலும் எகிறும்
தேங்காய் சிரட்டை டன் ரூ.34,500க்கு வேகமாக உயருது! விற்பனை வரத்து இல்லாததால் விலை மேலும் எகிறும்
UPDATED : ஜூலை 31, 2026 05:49 AM
ADDED : ஜூலை 30, 2026 04:30 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் தேங்காய் வரத்து இல்லாததால், தேங்காய் சிரட்டை ஒரு டன், 34,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வரும் நாட்களில் மேலும் விலை உயர வாய்ப்புள்ளது என, தமிழ்நாடு தென்னை விவசாயிகள் நலச்சங்கத்தினர் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், மற்ற சாகுபடிகளை விட தென்னை சாகுபடி அதிகம் உள்ளது. தென்னை ஓலை முதல், தேங்காய் தொட்டி (சிரட்டை) வரை அனைத்தும் பயன் அளிப்பதால், விவசாயிகள் தென்னை சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இங்கிருந்து, தேங்காய், கொப்பரை போன்றவை பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. கொப்பரை தரம் பிரிக்கப்பட்டு, விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதில், தேங்காய் சிரட்டை, கார்பன் தயாரிப்புக்காக பயன்படுத்தப்படுகின்றன. இவை வெளிநாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
'ஆக்டிவேட் கோகோனெட் கார்பன்' தயாரித்து, அவை குடிநீர் சுத்திகரிப்பு செய்யும், ஆர்.ஓ., மற்றும் 'காஸ்மடிக்' பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், தேங்காய் வரத்து இல்லாதாதால் சிரட்டை விலையும் வேகமாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு தென்னை விவசாயிகள் நலச்சங்க பிரதிநிதி தங்கவேலு கூறியதாவது:
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் தேங்காய் சீசன் நிறைவடைந்த நிலையில், வரத்து குறைந்துள்ளது. இதனால், தேங்காய், கொப்பரை உள்ளிட்ட அனைத்து விலையும் உயர்ந்து வருகின்றன. ஸ்பெஷல் கொப்பரை, 162 ரூபாயாகவும், சாதா கொப்பரை, 160 ரூபாய்; தேங்காய் எண்ணெய் 15 கிலோ டின், 3,600 ரூபாய்; தேங்காய் பவுடர் கிலோ, 230 ரூபாயாகவும், பச்சை தேங்காய், 54 ஆயிரம் ரூபாய், கருப்பு தேங்காய், 58 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கொப்பரை உற்பத்தி இல்லாத நிலையில், தேங்காய் சிரட்டைக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், சிரட்டை விலையும் உயர்ந்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் ஒரு டன் சிரட்டை விலை, 38 - 39 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. சிரட்டை பயன்படுத்தி கார்பன் தயாரிப்பு தமிழகத்தில் தான் அதிகமாக நடக்கிறது.
இந்நிலையில், தமிழகத்தில் சிலர் 'சிண்டிகேட்' அமைத்து, சிரட்டை விலையை உயர விடாமல் தடுக்கின்றனர். தற்போது, ஒரு டன், 34,500 ரூபாயாக உள்ளது. இது, 40 ஆயிரம் ரூபாயாக உயர வாய்ப்புள்ளது. 'ஆக்டிவேட் கோகோனெட் கார்பன்' தயாரிப்புக்கு மூலப்பொருளான, தேங்காய் சிரட்டை கிடைக்காததால், கார்பன் விலை உயரும்.
இவ்வாறு, கூறினார்.
