/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உயர் படிப்புக்கு ஏற்ப வேலைவாய்ப்பும் அதிகரிப்பு! கல்விக் கடன் வழங்கும் விழாவில் தகவல்
/
உயர் படிப்புக்கு ஏற்ப வேலைவாய்ப்பும் அதிகரிப்பு! கல்விக் கடன் வழங்கும் விழாவில் தகவல்
உயர் படிப்புக்கு ஏற்ப வேலைவாய்ப்பும் அதிகரிப்பு! கல்விக் கடன் வழங்கும் விழாவில் தகவல்
உயர் படிப்புக்கு ஏற்ப வேலைவாய்ப்பும் அதிகரிப்பு! கல்விக் கடன் வழங்கும் விழாவில் தகவல்
ADDED : செப் 12, 2024 09:20 PM
பொள்ளாச்சி : கோவை மாவட்டத்தில், உயர் படிப்புக்கு ஏற்ற வகையில், வேலைவாய்ப்பும் அதிகரித்து வருகிறது, என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்தார்.
பொள்ளாச்சி, மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில், அரசின் கல்விக் கடன் வழங்கும் முகாம் நடந்தது. கோவை கலெக்டர் கிராந்திகுமார், தலைமை வகித்து, 71.1 லட்சம் மதிப்பில், 23 மாணவர்களுக்கு கல்விக் கடன் பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:
தமிழகத்தில், பிளஸ் 2 முடித்து, உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, 45 சதவீதமாக உள்ளது. இதனை, நுாறு சதவீதமாக மாற்ற அரசு முனைப்பு காட்டி வருகிறது. அதன் அடிப்படையில், நான் முதல்வன், உயர்வுக்கு படி, தமிழ் புதல்வன், புதுமைப் பெண் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், மாணவர்களின் பொருளாதார பிரச்னை, உயர்கல்வி பயில்வதற்கு தடையாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டுதான், கோவை மாவட்டத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பயன்பெறும் வகையில், கல்விக் கடன் வழங்கும் முகாம் நடத்தப்படுகிறது.
உயர் படிப்புக்கு ஏற்ற வகையில், கோவை மாவட்டத்தில் வேலைவாய்ப்பும் அதிகரித்து வருகிறது. ஆனால், கல்விக் கடன் பெறுவதற்கு மாணவர்களிடம் போதிய விழிப்புணர்வு கிடையாது. கல்விக்கடன் பெறுவதற்கான சான்றிதழ்களை, பல்வேறு அரசு துறைகளிடம் இருந்தே பெற வேண்டியுள்ளது.
இதன் காரணமாகவே, அரசு அதிகாரிகள், கல்லுாரிகளுக்கு நேரடியாகச் சென்று, கல்விக் கடன் கோரும் மாணவர்களுக்கு, எந்தெந்த துறையில் எவ்வாறு விண்ணப்பம் அளிக்கலாம் எனவும், 'ஆன்லைன்' பதிவு முறை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதேநேரம், வங்கியாளர்கள், கல்வி கடன் கோரும் மாணவர்களின் விண்ணப்பங்களை ஆய்வு செய்து, விரைந்து கடன் வழங்க வேண்டும்.
இவ்வாறு, கலெக்டர் பேசினார்.
முகாமில், எம்.பி., ஈஸ்வரசாமி, சப்-கலெக்டர் கேத்ரின் சரண்யா, உதவி கலெக்டர் (பயிற்சி) அங்கித் குமார் ஜெயின், மகாலிங்கம் பொறியியல் கல்லுாரி முதல்வர் கோவிந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.