ADDED : பிப் 06, 2026 05:04 AM
கோ வை, இயந்திரங்களின் சத்தத்தோடு மட்டுமல்ல; இயற்கையின் நினைவுகளையும் பாதுகாத்து நிற்கிறது. அதற்கான உயிர்ப்பான சான்று தான் காஸ் வன அருங்காட்சியகம்.
சென்னை மாகாணத்தில் வனப் பாதுகாப்பின் முன்னோடிகளில் ஒருவராக விளங்கிய 'ஹோரேஸ் அரிச்சிபால்ட் காஸ்' என்பவரின் அபூர்வமான தொகுப்புகளின் அடையாளமாக திகழ்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் வனங்கள், வன விலங்குகள், பறவைகள் என, இயற்கையின் பரிசுகளை ஆழமாக நேசித்தவர் காஸ்.
19ம் நுாற்றாண்டின் நடுப்பகுதியில், சென்னை மாகாணத்தில் ஒரு வன அருங்காட்சியகத்தை நிறுவ வேண்டும் என்ற கனவு விதைக்கப்பட்டது. அப்போது வனப் பாதுகாவலராக இருந்த ஜே.ஏ. கேம்பிள் மேற்கொண்ட முயற்சிகள், சில ஆண்டுகளுக்கு பின் அவரது வாரிசான ஹோரேஸ் அரிச்சிபால்ட் காஸின் காலத்தில் நிஜமானது. காஸ் வன அருங்காட்சியக கட்டடம், ஐரோப்பாவின் இடைக்காலக் காலத்தை நினைவூட்டும் கோதிக் பாணி கட்டிடக்கலையின் அழகிய எடுத்துக்காட்டாகும்.'
நுழைந்தவுடன், ஆச்சர்யப்பட வைக்கும் வகையில் நிற்கிறது, இந்தியன் கவுர் எனப்படும் இந்திய பைசனின் முழு அளவிலான மாதிரி. இதனை மைசூர் சமஸ்தானத்தின் கடைசி மகாராஜா ஜெயசாம ராஜேந்திர வாடியார் பகதுார் (1919-1974) அருங்காட்சியகத்திற்கு பரிசளித்தார்.
காட்சியகத்தின் உயிராக விளங்குவது 'டாக்ஸிடெர்மி' எனப்படும் கலை. பறவைகள் மற்றும் விலங்குகளின் தோல்களை அறிவியல் முறையில் தயாரித்து, அடைத்து, காட்சிக்காக அமைப்பது தான் டாக்ஸிடெர்மி. இன்றைய காலத்தில், ஊடாடும் காட்சிகள் மற்றும் நவீன பாதுகாப்பு முறைகள் வாயிலாக, இயற்கை வரலாறு இங்கு கண்முன்னே உயிர்ப்பிக்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு இது ஒரு உற்சாகமான அறிவியல் அனுபவமாக அமைகிறது. 500க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகளை கொண்ட பட்டர்பிளை பெவிலியன், முக்கிய ஈர்ப்புகளில் ஒன்று. காஸ் வன அருங்காட்சியகம், விலங்குகளையும் பறவைகளையும் காட்சிப்படுத்தும் இடமாக மட்டும் அல்ல. அது, மனிதன்-இயற்கை உறவின் வரலாற்றைச் சொல்லும் ஒரு காலச்சுவடு.

