/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
24 மணி நேரத்தில் தொழில் தொடங்கலாம்; கோவை தொழில் முனைவோருக்கு மொரீஷியஸ் அழைப்பு
/
24 மணி நேரத்தில் தொழில் தொடங்கலாம்; கோவை தொழில் முனைவோருக்கு மொரீஷியஸ் அழைப்பு
24 மணி நேரத்தில் தொழில் தொடங்கலாம்; கோவை தொழில் முனைவோருக்கு மொரீஷியஸ் அழைப்பு
24 மணி நேரத்தில் தொழில் தொடங்கலாம்; கோவை தொழில் முனைவோருக்கு மொரீஷியஸ் அழைப்பு
ADDED : மார் 01, 2025 05:57 AM

கோவை; உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு வரியின்றி ஏற்றுமதி செய்ய, எங்கள் நாட்டில் தொழில் துவங்குங்கள் என, கோவை தொழில்முனைவோருக்கு, மொரீஷியஸ் அழைப்பு விடுத்துள்ளது.
நேரு கல்விக் குழுமங்கள் மற்றும் இந்திய -ஆப்பிரிக்க வர்த்தகக் குழு சார்பில், கோவையில் இந்திய-மொரீஷியஸ் வர்த்தக மாநாடு நடந்தது. இம்மாநாட்டில், இந்தியாவுக்கான மொரீஷியஸ் தூதர் முகேஸ்வர் சூனி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவும், மொரீஷியஸும் ரத்த உறவுகள் கொண்ட தேசம். மொரீஷியஸின் மொத்த மக்கள்தொகையில், 70 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர்.
இந்தியாவுக்கும், மொரீஷியஸுக்கும் இடையே வர்த்தக உறவு, நீண்ட காலமாக இருக்கிறது.
இந்தியா 460 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில், மொரீஷியஸுக்கு ஏற்றுமதி செய்கிறது. மொரீஷியஸ் 91 மில்லியன் டாலர் அளவுக்கு, ஏற்றுமதி செய்கிறது.
இந்தியாவில் இருந்து 315 விதமான பொருட்களும், மொரீஷியஸில் இருந்து 650 பொருட்களும் வர்த்தக பரிவர்த்தனை செய்து கொள்ள, ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
மொரீஷியஸ் ஒரு தீவு. ஆப்பிரிக்க நாடுகளுக்கான நுழைவாயில். மொரீஷியஸ் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. 52க்கும் மேற்பட்ட நாடுகள், 30 ஆப்பிரிக்க நாடுகளுடன், வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம்.
இந்தியர்கள் எங்கள் நாட்டில் தொழில் துவங்கினால், இந்தியாவில் இருந்து நேரடியாக ஏற்றுமதி செய்ய இயலாதவற்றை, அங்கிருந்து வரியின்றி ஏற்றுமதி செய்ய முடியும். விண்ணப்பித்த 24 மணி நேரத்தில், தொழில் துவங்க அனுமதி வழங்கப்படும். பொருட்கள், சேவைகள் என எந்தவொன்றையும், வர்த்தக பரிமாற்றம் செய்யலாம்.
உற்பத்தி, இன்ஜினீயரிங், சுகாதாரம், கல்வி என பல்வேறு துறைகளிலும் முதலீடுகளை வரவேற்கிறோம்.
குறைந்தபட்ச முதலீடு என்ற வரம்பு இல்லை. கார்ப்பரேட் வரி மிகக் குறைவு. வருமான வரியும் ஜீரோ முதல் 20 சதவீதம் வரைதான். ஏராளமான வரிச்சலுகைகள் உள்ளன.
மற்ற நாடுகளை விட, இந்தியா மீது மொரீஷியஸுக்கு தனி மரியாதை உண்டு. மற்ற நாடுகளின் பெரியண்ணன் மனப்பான்மை, இந்தியாவுக்கு இல்லை.
அரவணைத்துச் செல்லும் தேசம். பிரதமர் மோடியும் மொரீஷியஸுடன் நெருக்கம் காட்டுகிறார். கோவை தொழில்முனைவோர், மொரீஷியஸில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
நேரு கல்விக் குழுமங்களின் தலைவரும், மொரீஷியஸுக்கான கவுரவ வர்த்தக கமிஷனருமான கிருஷ்ணதாஸ், நேரு குழுமங்களின் செயலர் கிருஷ்ணகுமார், இந்திய பொருளாதார வர்த்தக அமைப்பு மற்றும் இந்திய ஆப்பிரிக்க வர்த்தகக் குழு தலைவர் ஆசிப் இக்பால் ஆகியோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து, முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. முதலீட்டாளர்களுக்கான வழிகாட்டி புத்தகம் வெளியிடப்பட்டது.
மொரீஷியஸில் தொழில் துவங்குவதற்கான வாய்ப்புகள், அரசின் உதவிகள், சந்தை வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பல்வேறு துறைகளைச் சார்ந்த தொழில்முனைவோர் பங்கேற்றனர்.