மின்னணு இயந்திரங்களில் மாதிரி ஓட்டுப்பதிவு துவங்கியது
மின்னணு இயந்திரங்களில் மாதிரி ஓட்டுப்பதிவு துவங்கியது
ADDED : ஏப் 12, 2024 12:41 AM

கோவை:கோவையில் பயன்படுத்த உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் உள்ள பட்டன்கள் சரியாக இயங்குகிறதா என சரிபார்க்க, மாதிரி ஓட்டுப்பதிவு செய்யும் பணி நேற்று துவங்கியது.
கோவையில் பயன்படுத்த உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 'விவி பேட்' இயந்திரங்கள் மற்றும் கன்ட்ரோல் யூனிட்டுகள், ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், மற்றும் சின்னத்துடன் கூடிய 'பேலட் ஷீட்' பொருத்தும் பணி நடந்து வருகிறது.
அடுத்த கட்டமாக, 37 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், மூன்று இயந்திரங்கள் பயன்படுத்துவதால், ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் உரிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு இணைப்பு கொடுத்து, தலா, 1,000 'டம்மி' ஓட்டுகள் பதிவு செய்து, அனைத்து பட்டன்களும் இயங்குகின்றனவா என தேர்தல் அலுவலர்கள் சரிபார்த்தனர்.
இதுதொடர்பாக, தேர்தல் பிரிவினர் கூறியதாவது:
ஒரு செட் இயந்திரத்தில், 1,000 ஓட்டுகள் போடப்படும்; அதற்கான ரசீது, 'விவி பேட்' இயந்திரத்தில் சரியாக அச்சாகிறதா என சரிபார்க்கப்படும். 1,000 ஓட்டுகள் பதிவு செய்த பின், அவற்றை அழித்து விடுவோம். பின், இயந்திரங்களில் புதிய பேட்டரி பொருத்தி, மீண்டும் சீலிடப்பட்டு, 'ஸ்ட்ராங்' ரூமில் வைத்து, மூடப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
