/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காந்தையாற்றை கடக்க மோட்டார் படகு பயணம் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு இலவசம்
/
காந்தையாற்றை கடக்க மோட்டார் படகு பயணம் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு இலவசம்
காந்தையாற்றை கடக்க மோட்டார் படகு பயணம் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு இலவசம்
காந்தையாற்றை கடக்க மோட்டார் படகு பயணம் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு இலவசம்
ADDED : ஆக 20, 2024 01:53 AM

மேட்டுப்பாளையம்;காந்தையாற்றில் தண்ணீர் தேங்கி நிற்பதால், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் சென்றுவர, சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம், இலவச மோட்டார் படகை இயக்கி வருகிறது.
மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை அருகே லிங்காபுரத்திற்கும், காந்த வயலுக்கும் இடையே, காந்தையாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே, 2005ம் ஆண்டு கட்டிய உயர் மட்ட பாலம், தண்ணீர் அதிகமாகும் போது மூழ்கி விடும்.
இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து, காந்தையாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் கட்டுமான பணிகள் முடியவில்லை.
தற்போது காந்தையாற்றில், 30 அடிக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. இதில், தார் சாலையின் அருகே அமைத்துள்ள, மண் சாலையும், பழைய பாலமும், தண்ணீரில் மூழ்கியது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், பரிசலில் பயணம் செய்து வருகின்றனர். சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் மோட்டார் படகை, பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக இயக்கி வருகிறது. ஒருமுறை படகில், 20 நபர்களை அழைத்து வர இடவசதி உள்ளது.
சிறுமுகை பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர், தலைவர் மாலதி கூறியதாவது:
மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்று, ஆழியார் அணையிலிருந்து, மோட்டார் படகு கொண்டு வரப்பட்டது. காலையில் மூன்று முறையும், மாலையில் மூன்று முறையும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக இலவசமாக இயக்கி வருகிறோம்.
இத்துடன் பொதுமக்கள், விவசாயிகள் சென்றுவர பரிசல்கள் இயக்கப்படுகின்றன.
இவ்வாறு கூறினர்.
மலைவாழ் மக்கள் கூறியதாவது:
காலையிலும், மாலையிலும் மட்டுமே, மாணவர்களுக்காக மோட்டார் படகு இயக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் சும்மா நிறுத்தி வைக்கப்படுகிறது.
ஆனால் பொதுமக்கள் ஆற்றை ஆபத்தான நிலையில், பரிசலில் பயணம் செய்து வருகிறோம். எனவே ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை, கட்டண அடிப்படையில் மோட்டார் படகை பொதுமக்களுக்காக இயக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.

