/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டோர புதர் செடிகளால் வாகன ஓட்டுநர்கள் தவிப்பு
/
ரோட்டோர புதர் செடிகளால் வாகன ஓட்டுநர்கள் தவிப்பு
ADDED : ஜூலை 08, 2024 11:50 PM

வால்பாறை;நெடுஞ்சாலைத்துறை ரோட்டை ஆக்கிரமிக்கும் செடிகளால், வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
சுற்றுலா தலமான வால்பாறையின், இயற்கை அழகை கண்டு ரசிக்க, நாள் தோறும் நுாற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் வால்பாறைக்கு வந்து செல்கின்றன.
ஆழியாறு - வால்பாறை இடையே, 40 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. அதேபோன்று, வால்பாறையில் இருந்து, அனைத்து எஸ்டேட் பகுதிகளுக்கும் வழித்தடங்கள் உள்ளன.
இந்நிலையில், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் மலைப்பாதை, மற்றும் எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லும் பாதையில், ரோட்டோரத்தை ஆக்கிரமித்து அதிக அளவில் புதர் செடிகள் முளைத்துள்ளன.
இதனால், எதிரே வரும் வாகனங்கள் பார்வைக்கு தெரியாத நிலையில், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. ரோட்டை ஆக்கிரமித்துள்ள செடிகளால், வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், ரோட்டோரத்தில், சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் பதுங்கியிருந்து தாக்குவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, ரோட்டோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள செடிகளை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.