/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பானிபூரி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு நிறமி அதிகமுள்ள உணவு பொருட்கள் பறிமுதல்
/
பானிபூரி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு நிறமி அதிகமுள்ள உணவு பொருட்கள் பறிமுதல்
பானிபூரி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு நிறமி அதிகமுள்ள உணவு பொருட்கள் பறிமுதல்
பானிபூரி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு நிறமி அதிகமுள்ள உணவு பொருட்கள் பறிமுதல்
ADDED : ஜூலை 05, 2024 12:16 AM

கோவை:பானிபூரி கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில், 65 லிட்டர் பானிபூரி மசாலா, 96 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பானிபூரியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் பல்வேறு உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து, கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் அறிவுறுத்தலின் படி, மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய, 10 குழுக்கள் காந்திபுரம், வ.உ.சி., பூங்கா, காந்தி பார்க், ஆர்.எஸ்., புரம், பீளமேடு, சித்ரா, சிங்காநல்லுார், கணபதி, சாய்பாபா காலனி, சரவணம்பட்டி, வடவள்ளி, டவுன் ஹால், ராமநாதபுரம், உக்கடம், சுந்தராபுரம், குனியமுத்துார், கிணத்துக்கடவு, தொண்டாமுத்துார், மதுக்கரை, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம், அன்னுார், துடியலுார், பெரியநாயக்கன்பாளையம் போன்ற பகுதிகளிலுள்ள பானிபூரி விற்பனை செய்யும் கடைகள், தயாரிக்கப்படும் இடங்கள், துரித உணவு, விற்பனை செய்யும் தள்ளுவண்டி கடைகளில் ஆய்வு மேற்கொண்டது.
இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறியதாவது:
கடைகளில், கண்டறிந்த குறைகளை சரிசெய்யும் பொருட்டு நோட்டீஸ் கொடுத்தல், அபராதம், உணவு மாதிரிகள் எடுத்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கள ஆய்வில் இதுவரை, 73 கடைகளை ஆய்வு செய்ததில், 16 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டும், தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் உபயோகித்திற்காக, 6 கடைகளுக்கு அபராதமாக ரூ.12 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது.
பானிபூரி விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பானிபூரி தயாரிக்கப்படும் இடங்களில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில், 73 சில்லரை விற்பனையாளர்கள் மற்றும் நான்கு தயாரிப்பு இடங்களில் அதிக நிறமி சேர்க்கப்பட்ட, 65 லிட்டர் பானிபூரி மசாலா, 57 கிலோ தரமற்ற உருளைக்கிழங்கு, 5 கிலோ காளான் மற்றும், 19 கிலோ உருளைக்கிழங்கு மசாலா, செய்திதாள்களை பயன்படுத்தி பறிமாறப்பட்ட பஜ்ஜி, போண்டா போன்ற உணவு பொருட்கள் மற்றும் அதிக நிறமி சேர்க்கப்பட்ட சிக்கன் 65, காளான் மசாலா போன்ற, 15 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதன் மதிப்பு சுமார் ரூ.28,200 ஆகும். அதில் நான்கு உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு உணவு பரிசோதனைக்காக உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.